Tamilnadu

திருமண ஏற்பாடு... காதலனுடன் மகள் தற்கொலை முயற்சி: அவமானம் தாங்காமல் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை!

கிருஷ்ணகிரி மாவட்டம், மிண்டிகிரி பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் பெங்களூரில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். மனைவி அம்ச வேணி. இவர்களுக்குப் பிரியா, திரிஷா என்ற இரண்டு மகள்களும், விஷ்ணு என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் மகாலிங்கம் தனது மூத்த மகள் பிரியாவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளார். இதனிடையே பிரியா அதே பகுதியை சேர்ந்த திருப்பதி என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பிரியாவின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், திருமண ஏற்பாடுகளால் மனமுடைந்த பிரியாவும், திருப்பதியும் நேற்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளனர். இதனை அறிந்த திருப்பதியின் பெற்றோர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இவர்களுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில்,பிரியா காதலனுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்றதை அறிந்த அம்சவேணி குடும்ப மானமே போய்விட்டது என நினைத்து, வீட்டின் அருகே இருந்த கிணற்றில் மகள் திரிஷா மற்றும் மகன் விஷ்ணுவுடன் குதித்துள்ளார்.

இதில் அம்சவேணி மற்றும் விஷ்ணு இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மகள் திரிஷாவுக்கு நீச்சல் தெரிந்ததால் இரவு முழுவதும் நீந்திய படியே இருந்துள்ளார். பின்னர் காலையில் கிணற்றிலிருந்து சத்தம் வருவதை அறிந்து அக்கம்பக்கத்தினர் எட்டி பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் திரிஷாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கிணற்றில் உயிரிழந்த அம்சவேணி மற்றும் விஷ்ணு ஆகிய இருவரின் உடல்களையும் கயிறு மூலம் கிணற்றின் வெளியே அவர்களின் உடல்களை மீட்டனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மகள் காதலனுடன் சேர்ந்து விஷம் அருந்தி தற்கொலை முயற்சியால் தாய் தனது குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டல்; அதிர்ச்சியில் தாய்; கைதான வளர்ப்பு தந்தை!