Tamilnadu

சிகிச்சைக்கு வந்தவரிடம் கண் இமைக்கும் நேரத்தில் ரூ.2.77 லட்சத்தை சுருட்டிய ஈரானிய கொள்ளையர்கள்!

சோமாலியா நாட்டை சேர்ந்த அலி அகமத் அலி(61) என்பவர் சோமாலியா நாட்டில் தனியார் பள்ளி முதல்வராக இருந்து வருகிறார். கண் சிகிச்சைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சென்னை வந்த அவர் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி வருகிறார்.

இந்த நிலையில் சிகிச்சைக்காக வழிகாட்டியான அப்துல் என்பவருடன் அலி நுங்கம்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மாடல் பள்ளி சாலை கார்ப்பரேஷன் பள்ளி எதிரே நடந்து வந்த போது அவ்வழியாக இரண்டு காரில் வந்த மூவர் வழிமறித்து மத்திய காவல்துறையினர் எனக்கூறி சோதனை செய்ய வேண்டும் என கூறி பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளனர்.

இதனையடுத்து அலி அகமது தனது கைப்பையில் இருந்து ஆவணங்களோடு பர்சையும் எடுத்துள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் அவரது பர்சில் வைத்திருந்த அமெரிக்க டாலர் 3800 (இந்திய மதிப்பில் 2,77,000) பணத்தை பறித்து தப்பியோடி உள்ளனர். இது தொடர்பாக அலி அகமது ஆயிரம் விளக்கு காவல்துறையினரிடம் புகார் அளித்த போது அவர்கள் போலி போலீஸ் என தெரியவந்தது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தேடி வந்தனர்.

Also Read: MLA சீட் வாங்கி தருவதாக ரூ.60 லட்சம் மோசடி: பா.ஜ.க நகர தலைவரை ஏமாற்றிய ஒன்றிய அமைச்சரின் உதவியாளர்?

சிசிடிவியில் பதிவான முக அடையாளங்கள் வட மாநிலத்தவர் போல் இருந்தது. இதே பாணியில் கொள்ளையடிக்கும் கும்பல் குறித்தான பழைய குற்றவாளியின் அடையாளங்களை தேடி உள்ளனர். மேலும் சிசிடிவியில் பதிவான அடையாளங்களில் உள்ள நபர்கள் குறித்து அனைத்து லாட்ஜ் மற்றும் விடுதி உரிமையாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதே பாணியில் கடந்த 10 நாட்களில் அசோக் நகர், விருகம்பாக்கம், கொளத்தூர், கே.கே நகர் ஆகிய இடங்களிலும் போலீசார் எனக்கூறி கவனத்தை திசை திருப்பி கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியது.

இந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை பின்தொடர்ந்த போலிசார் இந்த கும்பல் கோவளத்தில் உள்ள ரிசார்டில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நுங்கம்பாக்கம் தனிப்படை போலீசார் விரைந்து அறையில் பதுங்கி இருந்த 3 பெண்கள் உட்பட 9 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிக்கும் ஈரானிய கும்பல் என தெரியவந்தது.

ஈரான் நாட்டை சேர்ந்த சபீர் (35), ரூஸ்தம் சைதி( 28), ஷியவஸ் (26) மற்றும் 3 பெண்கள் உட்பட 9 பேர் என தெரியவந்தது. கவனத்தை திசை திருப்பி நொடிப்பொழுதில் லாவகமாக திருடுவதில் ஈரானிய கொள்ளையர்கள் வல்லவர்கள். இவர்கள் துணி வியாபாரம் செய்வது போல் ஆளில்லாத பகுதியை நோட்டமிட்டு முதியவர்களை குறிவைத்து திருடுவது, போலீஸ் என கூறி நகைகளை மடித்து வைக்க சொல்லி கற்களை மடித்து கொடுத்து கொள்ளையடிப்பது போன்ற பாணியில் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.

இதே போல் சென்னையில் பல இடங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 13 செல்போன் , ஈரான் பணம் 5லட்சம், அமெரிக்கா டாலர் 28 இந்திய பணம் 57 ஆயிரம் ரூபாய் மற்றும் 2 கார் ஆகியவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Also Read: 4 பேருடன் திருமணம்... 60 லட்சம் மோசடி... கிராமத்தையே ஏமாற்றிய ’பலே’ பெண் - போலிஸில் சிக்கியது எப்படி?