Tamilnadu

“புகாரை பதிவு செய்த 1 மணி நேரத்தில் நடவடிக்கை” : நெகிழ்ந்துபோய் நன்றி தெரிவித்த பயனாளி!

“உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற இணையதளப் பதிவில் தமிழக மக்கள் தங்கள் கோரிக்கைகளை பதிவு செய்த அடுத்த சில மணி நேரங்களில் தங்கள் கோரிக்கை தீர்வு காணப்படுகிறது என்பதனை அறிந்த மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நேரில் சந்தித்தும், கடிதம் மூலமும், இணையதளம் மூலமும், வீடியோ மூலமும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

“உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற இணையத்தில் பதிவு செய்து தனது கோரிக்கை சில மணி நேரத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு கோவையைச் சேர்ந்த பொறியாளர் மோகன் குமார் கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். இச்செய்தி மின்னல் வேகத்தில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற தலைப்பில் வாட்ஸ் அப்பில் வலம் வந்து கொண்டிருக்கின்றது.

கோவையைச் சேர்ந்தவர் மோகன்குமார். இவர் பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினீயராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இவர் ஒரு நிலத்தை வாங்கி இருக்கிறார். பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து இரண்டு நாட்கள் கழித்து வில்லங்க சான்றிதழ் பெறுவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டு அதனை தீர்க்க எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் பலன் கிடைக்கவில்லை.

இதனால், தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சம்பளத்தில் ஆசையாக வாங்கிய நிலத்தில் வீடு கட்ட முடியாமல் தவித்தார் மோகன்குமார். மிகுந்த மன உளைச்சலுக்குள்ளான மோகன்குமார் கடைசி முயற்சியாக “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” இணையதளத்தில் தன்னுடைய குறையைப் பதிவு செய்தார். பதிவு செய்த ஒரு மணி நேரத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது மட்டுமின்றி, மூன்றே மணி நேரத்தில் அவருடைய பிரச்சினையும் தீர்க்கப்பட்டு விட்டது.

இதனால், மிகுந்த மகிழ்ச்சி அடைந்த மோகன்குமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து தன்னுடைய நன்றியைத் தெரிவிப்பதற்காக முதலமைச்சர் சிறப்பு பிரிவு அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தில், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் ஒரு அருமையான திட்டம். என்னுடைய பிரச்சினை தீர்க்கப்பட்டதற்காக நானும் என்னுடைய குடும்பத்தாரும் மனதின் அடி ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”- என்று மோகன் குமார் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: முரசொலி

Also Read: “சத்தமின்றி சமூகப் புரட்சியை ஏற்படுத்தி வரும் மு.க.ஸ்டாலின் ஆட்சி” - மக்கள் கொண்டாடும் முதலமைச்சர்!