Tamilnadu

பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரை ‘தற்காப்புக்காக’ கொலை செய்த இளம்பெண்... விடுதலை செய்த எஸ்.பி!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வழுதிகைமேடு பகுதியில் சென்னையைச் சேர்ந்த மணி என்பவருக்கு சொந்தமான மீன் பண்ணையில் தங்கி பூங்காவனம் மற்றும் அமுதா தம்பதியர் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

சம்பவத்தன்று இருவரும் வேலை முடித்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு நபர் அமுதாவை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். இதனால் அமுதா அந்த நபரை தள்ளி விட்டதில் அவர் தலை கல்லில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலிஸார் அந்த நபரின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து பூங்காவனம் மற்றும் அவரது மனைவி அமுதாவிடம் பொன்னேரி போலிஸார் விசாரணை நடத்தினர்.

தன்னிடம் தவறாக நடக்க முயன்றதால் தன்னை தற்காத்துக் கொள்ளவே அந்த நபரை அடித்துக் கொன்றதாக அமுதா வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் சட்டப்பிரிவு 100-ன் கீழ் தற்காப்பிற்காக நடைபெற்ற கொலை என்று பதிவு செய்து அமுதாவை விடுவித்துள்ளார்.

Also Read: ‘சினிமா சிரிப்பு போலிஸ் கூட இப்படி காமெடி செய்யமாட்டார்’ - ஆட்டுக்கார அண்ணாமலைக்கு பத்திரிகையாளர் பதிலடி!