Tamilnadu

"வேட்பு மனுவில் தகவல்களை மறைத்த நத்தம் விஸ்வநாதன் மீது நடவடிக்கை" : உயர்நீதிமன்றம் அதிரடி!

தமிழ்நாட்டில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நத்தம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் நத்தம் விசுவநாதன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வேட்பு மனுவில் தகவல்களை மறைத்த நத்தம் விஸ்வநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல்லைச் சேர்ந்த சபாபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், நத்தம் விஸ்வநாதன் 4.75 கோடி வருமான வரி செலுத்தாதது தொடர்பாக வருமான வரி வழக்கு வருமான வரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது. அதேபோல், 279 கோடி ரூபாய் வரி செலுத்தாதது தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு அவரது சொத்துகளை முடக்கம் செய்து வருமான வரி உத்தரவு பிறப்பித்தது.

இந்த அனைத்து தகவல்களையும் நத்தம் விஸ்வநாதன் தனது வேட்புமனுவில் தெரிவிக்காமல் மறைத்துள்ளதாகவும், இதை சரிபார்க்காமல் தேர்தல் ஆணையம் விஸ்வநாதனை போட்டியிட அனுமதித்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், மனுதாரர் மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாகவும், இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தால் பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க வேண்டும் எனவும், புகார் குறித்து சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு உரிய வாய்ப்பளித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டனர். இதுபோன்ற புகாரில் சம்பந்தப்பட்டவர்கள் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என பார்க்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Also Read: “100 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்த அ.தி.மு.க நிர்வாகி” : தானமாக வழங்கியவரின் மகன் புகார் !