Tamilnadu

"லீவு போடாம வேலை செஞ்சா 2 லிட்டர் பெட்ரோல் இலவசம்" : திருப்பூர் பனியன் கம்பெனியின் விளம்பரப் பலகை!

கொரோனா தொற்று நாட்டையே அச்சுறுத்திவரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் மக்களை கூடுதலாக வதைத்து வருகிறது ஒன்றிய அரசு. மேலும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை நூறைத் தாண்டி தொடர்ந்து அதிகரித்தே வருவது ஒன்றிய அரசின் மீது மக்களைக் கோபமடையச் செய்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மறைமுகமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்திருப்பது மக்களை இன்னும் கடும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. இந்நிலையில் விடுப்பு எடுக்காமல் வேலை பார்த்தால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் பனியன் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன. இங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்தனர். தற்போது தொழிலாளர்கள் திரும்பி வந்தாலும் தொழிலாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

இதனால் திருப்பூரை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் ஒருவர் ஓவர்லாக், பேட்லாக் தையல் இயந்திர டைலர்கள் ஒரு வாரம் வேலை செய்தால் இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசம் என எழுதி தனது தொலைபேசி எண்ணையும் இணைத்து விளம்பரமாக மின் கம்பங்களில் கட்டி வைத்துள்ளார். இந்த விளம்பர பலகையை திருப்பூர் மக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

Also Read: “கொரோனா பரவலுக்கு முன்பே இந்திய பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது மோடி அரசு” - டி.ராஜா சாடல்!