Tamilnadu

“ராணுவ தளவாட தொழிற்சாலைகளை தாரைவார்க்கும் மோடி அரசு” : போராடும் தொழிலாளர்களை ஒடுக்க புதிய சட்டம்?

ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் தயாரிப்புக்காக நாடு முழுவதிலும் ஒன்றிய அரசின் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆயுதங்கள் தயாரிப்பு, 1775-ல் ஆங்கிலேயரால் கொல்கத்தாவில் முதலாவதாக துவக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் ஊட்டியின் அரவங்காடு மற்றும் சென்னையின் ஆவடி, உ.பி.யின் கான்பூர், ஒடிசாவின் பொளங்கீர், ம.பி.யின் ஜபல்பூர் உள்ளிட்ட 41 இடங்களில் இந்த தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

இவற்றை நிர்வாகிக்க ராணுவ தளவாடங்கள் தொழிற்சாலை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. ராணுவத் தளவாடங்கள் உற்பத்தித்துறையின் கீழ் இயங்கும் இதை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் நிர்வகிக்கிறது.

இவற்றில் கடந்த 4 வருடங்களுக்கு முன் ஆயுதங்கள் உற்பத்தியில், “குறிப்பிட்ட தயாரிப்புகள் மட்டுமே’ எனும் வகையான ஒரு கொள்கை உருவாக்கப்பட்டது. இதனால், பெரும்பாலான தொழிற் சாலைகளில் நடைபெற்று வந்த பல முக்கிய ஆயுதங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன்மூலம், சுமார் 20,000 கோடி ரூபாயாக இருந்த இந்த தொழிற்சாலைகளின் உற்பத்தி பாதியாகக் குறைந்து வருகிறது.

இதன் பின்னணியில் அந்த தொழிற்சாலைகளை முதலில் பொது நிறுவனங்களாக மாற்றிபிறகு, தனியார் பெருநிறுவனங்களிடம் தாரைவார்ப்பது ஒன்றிய அரசின் திட்டம் என கூறப்படுகிறது. அதன்படியே தற்போது ஒன்றிய அரசின் கீழ் இயங்கிவரும் ராணுவ தளவாடங்கள் தொழிற்சாலைகளை தனியாருக்கு விடும் நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டுவருகிறது.

மோடி அரசின் இத்தகைய நடவடிக்கை எதிராக ராணுவ தளவாடங்கள் தொழிற்சாலைகளை பணிபுரியும் ஊழியர்கள் அரசு இந்த நடவடிக்கையை கைவிடவேண்டும் என வலியுறுத்தி தொடர்போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், போராடும் தொழிலாளர்களை ஒடுக்கும் விதமாக ஒன்றிய அரசு அவசர சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. அதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்தின் படி, ஊழியர்கள் போராட்டம் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்யப்பட்டு ஓராண்டு வரை சிறையிலடைக்கப்படுவார்கள்.

பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம். பிணை கிடையாது. போராட்டதை தூண்டினால் உடனடி பணி நீக்கம், 2 ஆண்டு வரை சிறை தண்டணை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்தின் மூலம் தொழிற்சங்க தலைவர்களையும், ஊழியர்களையும் ஒன்றிய அரசு ஒடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசின் இந்த அடக்குமுறை சட்டத்துக்கு எதிராக ஜூலை 23 ஆம் தேதி நாடுதழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று மத்திய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Also Read: “தேர்தலை ஜனநாயக முறையில் சந்திக்கும் எண்ணமே பா.ஜ.கவுக்கு கிடையாது” : ‘தினகரன்’ தலையங்கத்தில் விமர்சனம்!