Tamilnadu

“நிவாரண உதவி கிடைக்காத 50,000 அமைப்பு சாரா நலவாரிய தொழிலாளர்களுக்கு உதவித் தொகை” : அமைச்சர் கணேசன் உறுதி!

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்தபோது, ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் பலர் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அமைப்ப சாரா தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிப்படைந்தனர். அப்போது எதிர்க்கட்சிகள் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு ரூ.1,000 நிவாரணம் அறிவித்தது. ஆனால், அரசின் நிவாரணம் பெரும்பாலானவர்களுக்குக் கிடைக்கவில்லை. இதையடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க இது குறித்து ஆய்வு நடத்திய போது, கடந்த ஐந்து ஆண்டுகளாக 75 ஆயிரம் நல வாரிய உறுப்பினர்களுக்கு உதவித் வழங்காமல் இருந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கூறுகையில், “கடந்த 5 ஆண்டுகளாக சுமார் 75 ஆயிரம் உறுப்பினர்களுக்கு வாரியத்தால் செயல்படுத்தப்படும் உதவித் தொகைகள் வழங்கப்படாமல் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க அரசு புதிதாகப் பொறுப்பேற்றதும், உதவித் தொகை கிடைக்கப் பெறாதோர் குறித்து ஆராயப்பட்டது. தி.மு.க ஆட்சி அமைந்து 50 நாட்களைக் கடந்திருப்பதை முன்னிட்டு, முதற்கட்டமாக 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு அரசின் உதவித் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க இருக்கிறார். மற்றவர்களுக்கு அடுத்தடுத்த கட்டங்களாக உதவித் தொகைகள் வழங்கப்படும் ” என தெரிவித்துள்ளார்.

Also Read: “அனைத்து மின் இணைப்புகளிலும் உயிர்காக்கும் சாதனத்தை கட்டாயம் பொருத்த வேண்டும்” : புதிய விதிமுறைகள் அமல் !