Tamilnadu

“சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்து காட்டுவார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : அமைச்சர் செந்தில் பாலாஜி!

கரூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த வாரம் முதல் மக்கள் சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று வருகிறார். இதன்படி இன்று கரூர் நகராட்சி 1வது வார்டு கோதூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வார். ஜூன் 3ம் தேதி கொரோனா நிவாரணமாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்றார்.

அதேபோல் மே மாதமே முதல் தவணையாக ரூ.2 ஆயிரமும், ஜூன் 3ம் தேதி இரண்டாவது தவணை ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டது. இவற்றுடன், 14 மளிகைப் பொருட்கள் தொகுப்பையும் வழங்கினார். முதலமைச்சரிடம் கூறி கரூர் நகராட்சி நிகழாண்டிலேயே மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும். கரூர் நகராட்சியில் உள்ள 43 வார்டுகளில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து குளித்தலை நகராட்சி, 11 பேரூராட்சிகள், 157 ஊராட்சிகளில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படும். கடந்த வாரம் 4,000க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு அவை துறைவாரியாகப் பிரிக்கப்பட்டு நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

Also Read: “அங்கீகாரமற்ற மனைகளை பதிவு செய்வதாக புகார் வந்தால் உடனே நடவடிக்கை” : அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை!