Tamilnadu

“நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றிக் கிடைக்க வேண்டும்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"நியாய விலைக்கடைகளில் தரமான அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றிக் கிடைக்க வேண்டும்'' கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

பொதுமக்களின் நலனுக்காகக் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு திட்டங்களான நியாயவிலைக் கடைகள், குடும்ப அட்டைகள் வழங்குதல், உணவுப் பொருட்கள் விநியோகம், சிறப்பு பொது விநியோகத்திட்டம், நியாய விலைக்கடைகளைக் கணினிமயமாக்கல், கைவிரல் ரேகைப்பதிவு, குடும்ப அட்டைகள் மாற்றம், பல்பொருள் அங்காடிகளில் தரமான பொருட்களை வழங்குதல், கொரோனா காலத்தில் அரசின் நலத்திட்டங்களான உணவுப்பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகையினைப் பொதுமக்களுக்கு வழங்குதல் மற்றும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள், நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (3.7.2021) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களுக்கு நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றிக் கிடைத்திடவும், பொருட்களின் தரத்தினை உறுதி செய்திடவும், குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்குக் காலதாமதமின்றி குடும்ப அட்டைகள் கிடைத்திட நடவடிக்கை எடுத்திடவும், கோவிட் பெருந்தொற்று காலத்தில் கடனுதவி கோரும் சுயஉதவிக் குழுக்கள், சிறு வணிகர்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் தொழில்முனைவோர் போன்றவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட கூட்டுறவு சங்கங்கள் வாயிலாகத் தகுதியானவர்களுக்கு கடன் வழங்கிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பொது விநியோகத் திட்டத்தை முழுவதும் கணினிமயமாக்குதல், பல துறைகள் மூலம் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளை ஒரே துறையின்கீழ் கொண்டு வருதல், வாடகைக் கட்டிடங்களில் செயல்படும் நியாய விலைக்கடைகளுக்குச் சொந்த கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், பெண் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், சேமிப்புக்கிடங்குகளை மேம்படுத்துதல், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நெல் ஆகியவற்றை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டுசெல்லப்படுவதை இணைய வழியில் கண்காணித்தல், எடைக்குறைவு போன்றவற்றைக் களைதல், தரமான சேவையினைப் பொதுமக்களுக்கு வழங்குதல் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆலோசனை வழங்கினார்.

தமிழ்நாட்டு மக்களுக்குக் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயக் கடன், நகைக்கடன் வழங்குதல், மானிய விலையில் உரம் மற்றும் விவசாய இடுபொருட்கள் வழங்குதல் போன்றவற்றை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்தும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருட்டிணன், இ.ஆ.ப., கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதீன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Also Read: “காவிரியை போல் தென்பெண்ணை ஆற்றிலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய அரசு” : வைகோ ஆவேசம்!