Tamilnadu

“வீணான அரசியல் நடத்துகிறார்கள்; மேகதாதுவில் அணைகட்ட அனுமதிக்க மாட்டோம்” : அமைச்சர் துரைமுருகன் உறுதி !

சட்டப்பேரவையில் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்ட முயற்சிப்பதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனப் பேசினார்.

இதற்குப் பதிலளித்து அவை முன்னவரும் நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான துரைமுருகன் கூறியதாவது :-

ஜி.கே. மணி, மேகதாது குறித்துச் சொன்னார். இந்த அரசு, முன்பு இருந்தபோதும் சரி, இப்பொழுதும் சரி, மேகதாது கட்டக் கூடாது என்பதிலே திடமான, உறுதியான நம்பிக்கையோடு இருக்கிறது. முன்பு இருந்த அரசும் அதிலே திடமாகத்தான் இருந்திருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை.

ஆனாலும், சமீபத்தில் பிரதமரைச் சந்தித்த நம்முடைய முதல்வர் அவர்கள் பல விஷயங்களைப் பேசினாலும், இந்த விஷயத்தை கொஞ்சம் அழுத்திப் பேசினார். அப்பொழுது பிரதமர் அவர்கள் உடனே சொன்னார், ”Here's our Irri- gation Minister. Did you see our Jal Shakti Minister? ஜல்சக்தி மினிஸ்டரைப் பார்த்தீர்களா என்று கேட்டார். நான், இல்லை என்று சொன்னேன்.

அதற்கு பிரதமர் சொன்னார், “நானே ஜல்சக்தி மினிஸ்டரிடம் சொல்கிறேன். நீங்கள் இன்றைக்கு அவரைப்போய்ப் பார்க்க முடியுமா?” என்று கேட்டார். அப்படி இன்று பார்க்க முடியவில்லை என்றாலும், இந்தக் கூட்டத்தொடர் முடிந்து நேரடியாக வந்துபார்க்கிறோம் என்று சொன்னோம். “சரி, நேரில் வந்து பாருங்கள்” என்று சொன்னார்.

ஆகையினால், இந்தப் பிரச்சினையை விரிவாகச் சொல்லியிருக்கிறார். “அதுகுறித்துப் பேசிவிட்டுவந்து மத்திய நீர்வளத் துறை அமைச்சரையும் போய்ப் பார்த்துப் பேசி விட்டுவந்து அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று எனக்குச் சொல்லுங்கள், அதற்குப் பிறகு, அதுகுறித்து நான் அடுத்த நடவடிக்கையை எடுக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.

எனவே, மேகதாது அணை கட்டக்கூடாது என்பதிலே உறுதியாக இருக்கிறோம். ஆனால், ஒரு சின்ன பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒன்றுமில்லை, அவர்கள் ஒரு DPR தான் கேட்டிருக்கிறார்கள். வேறு ஒன்றும் அவர்கள் கேட்கவில்லை. மேகதாது அணை கட்டுவதற்கு ஒரு விரிவான ஓர் அறிக்கை தயாரிக்க வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள்.

எங்கே போய் கேட்டிருக்கிறார்கள். CentralWater Commission-ல் போய் கேட்டிருக்கிறார்கள். Central Water Commission அதற்கு permission கொடுத்துவிட்டார்கள். ஆனால் அரசு உடனடியாக கர்நாடக அரசை எதிர்த்தும் Supreme Court -ல் case போட்டிருக்கிறது. இந்த Central Water Commission இதை எப்படி கொடுத்தது என்று அவர்கள் மீதும் ஒரு contempt petition போடப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் அதை எடுத்துக் கொண்டு போய் Environmental Impact Assessment-ல் போய் திட்டங்களை வாங்குவதற்கு அவர்களிடம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கும் நாங்கள் கொடுத்திருக்கிறோம். ஆகையினால், அவர்கள் எந்தெந்த இடங்களில் - கர்நாடக அரசு -move செய்யுமோ அந்தந்த இடங்களில் ஒரு check வைக்கப்பட்டிருக்கிறது.

இதையும் மீறி அவர்கள் எந்த விதத்திலும் கர்நாடகாவில் அணையே கட்டமுடியாது. ஆனால் இதில் அரசியல் உள்ளது. என்று நம் ஊரில் கேட்பார்கள். ஆக, இதில் வீணான ஓர் அரசியல் நடத்துகிறார்களே தவிர, ஆக்கப்பூர்வமான திட்டமல்ல. எப்படி நடத்தினாலும் இந்த அரசு உறுதியாக இருக்கும். முதல்வர் அவர்கள் அதில் உறுதியாக இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “நிபுணத்துவம், அறிவு அடிப்படையிலான ஒரு ‘மாதிரி அரசு’ தமிழ்நாட்டில் செயல்படுகிறது” : ரூபாலி ஸ்ரீவஸ்தவா !