Tamilnadu

தமிழ்நாட்டில் NEET ரத்தாக என்ன செய்வது? - ஏ.கே.ராஜன் ஆணையத்திடம் முக்கிய ஆலோசனைகளை சமர்பித்த வி.சி.க!

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்குத் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்நிலைக் குழுவிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சில முக்கியமான ஆலோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதன் விவரம் பின்வருமாறு:-

“கல்வி என்பது தற்போது அரசியலமைப்புச் சட்டத்தின் பொது அதிகாரப் பட்டியலில் (concurrent list) உள்ளதால் நீட் தேர்வை ரத்து செய்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றுவதற்கு அதிகாரம் உள்ளது. ஆனால், பொதுப் பட்டியலில் உள்ள ஒரு பொருள் தொடர்பாக மாநில சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டத்தின் அதே பொருள் தொடர்பாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தின் மூலம் ஒரு சட்டத்தை இயற்றுமெனில் ஒன்றிய அரசு இயற்றும் சட்டமே செல்லுபடியாகும் என அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 254ன் உட்பிரிவு 1 கூறுகிறது.

ஆனால்,உட்பிரிவு 2 ல் அதற்கு ஒரு விதி விலக்கைத் தந்திருக்கிறார்கள். “பொதுப் பட்டியலில் உள்ள ஒரு பொருள் தொடர்பாக ஒன்றிய அரசு சட்டம் இயற்றியதன் பிறகு அதே பொருள் தொடர்பாக மாநில அரசு சட்டம் ஒன்றை இயற்றி அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுவிட்டால் அந்த மாநிலத்தில் அந்த சட்டம் செல்லுபடியாகும்” என விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக இயற்றப்பட்ட இரண்டு சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காமல் நிராகரித்க்துவிட்ட நிலையில் மீண்டும் சட்டம் இயற்றினாலும் டெல்லியில் பா.ஜ.க அரசு தொடர்வதால் அதே நிலைதான் ஏற்படும்.

Also Read: “பிரதமர் மோடி செய்யாததை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்கிறார்” : ‘The Telegraph’ ஆங்கில நாளேடு புகழாரம்!

எனவே, பின்வரும் அலோசனைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளன.

1. நீட் தேர்வு முற்றாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை. ஆனால், அதை ஒன்றிய அரசு தான் செய்ய முடியும் என்ற நிலையில் அதற்கான தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாடு அரசு அழுத்தம் தர வேண்டும். நாடாளுமன்றத்தில் அதற்காகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒருக்கிணைந்து போராட தமிழ்நாடு அரசு முன்முயற்சி எடுக்கவேண்டும்.

2. நீட் தேர்வு மாநில உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்ற தனது நிலைப்பாட்டுக்கு ஆதரவாகப் பிற மாநில அரசுகளின் ஆதரவைத் திரட்ட வேண்டும். அதற்காக பா.ஜ.க அல்லாத மாநில முதலமைச்சர்களின் கூட்டம் ஒன்றைத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாகக் கூட்ட வேண்டும் என இந்த ஆணையம் பரிந்துரை செய்யவேண்டும்.

3. தற்போது எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்களில் 15%, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 50% , சிறப்புப் படிப்புகளில் (Super Speciality courses) 100% இடங்களை தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளிலிருந்து ஒன்றிய தொகுப்புக்கு அளித்து வருகிறோம். அதை உடனடியாக நிறுத்தவேண்டும்.

4. நீட் போன்ற நுழைவுத் தேர்வை பிற பட்டப் படிப்புகளுக்குக் கொண்டு வருவதற்கான ஒன்றிய அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்தவேண்டும்.”

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: “ஏற்றத்தாழ்வின் உச்சம் NEET; தேர்வு என்ற பெயரிலான கொலைக்களம் அது” - தி.மு.க இளைஞரணி, மாணவரணி கூட்டறிக்கை!