Tamilnadu
“கொலை செய்யக்கூட அஞ்சமாட்டார் எச்.ராஜா” - சிவகங்கை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா கடிதம்!
பா.ஜ.கவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
எச்.ராஜா, தனது தோல்விக்கு கட்சி நிர்வாகிகளின் மேல் பழி போட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு ஒன்றிய தலைவர் பாலா உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் பலர் மாவட்டத் தலைவர் செல்வராஜிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர்.
பா.ஜ.க-வின் சிவகங்கை மாவட்டத் தலைவர் செல்வராஜூம் மாநிலத் தலைமைக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார். இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது.
பா.ஜ.க காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன், பா.ஜ.க சிவகங்கை மாவட்டத் தலைவர் செல்வராஜிடம் அளித்துள்ள கடிதத்தில், “எச்.ராஜா தனது தோல்விக்கு என்ன காரணம் என்பதை ஆராயாமலும், சுயபரிசோதனை செய்து கொள்ளாமலும், தான் செய்த தவறை மறைப்பதற்காக எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்.
மேலும், மாவட்ட துணை தலைவர் எஸ்.வி.நாராயணன் மூலமாக எனக்கு பல்வேறு வகையில் தொல்லை கொடுத்து வந்தார். எச்.ராஜா மற்றும் அவரது மருமகன் சூர்யா ஆகியோர் என்னை பல்வேறு நபர்கள் மூலமாக தொடர்ந்து மிரட்டி வந்தார். இதனால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் ஆபத்து நிகழும் என அஞ்சுகிறேன்.
மேலும் பதவியில் நான் தொடர்ந்து நீடித்தால் என்னை கொலை செய்யக்கூட அஞ்சமாட்டார்கள் என அஞ்சி எனது காரைக்குடி நகரத் தலைவர் பொறுப்பிலிருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எனக்கோ, எனது குடும்பத்தாருக்கோ, என்னுடன் இணைந்து பணியாற்றிய கட்சி நிர்வாகிகளின் உயிருக்கோ உடைமைக்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு எச்.ராஜா உள்ளிட்டவர்களே பொறுப்பாவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!