Tamilnadu

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை கடைபிடிக்கவேண்டும்: குடியரசுத் தலைவருக்கு திமுக MP கடிதம்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் செய்யும்பொழுது சமூக நீதியை கடைபிடிக்கவும், மாநிலங்களுக்கான உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதை உறுதி செய்யவும் மத்திய அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கடிதம் எழுதிய கடிதம் பின்வருமாறு :- “உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் ஒரு சீரான முறைகள் எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. உயர் நீதிமன்றத்தில் அதிக நீதிபதிகளை கொண்டிருந்தாலும், அந்தக் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை.

உதாரணமாக, ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் 37 நீதிபதிகள் மட்டுமே இருக்கக்கூடிய சூழலில், இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளனர். அதே நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 நீதிபதிகள் இருந்தும் ஒரே ஒரு ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி மட்டுமே உள்ளனர். எனவே, விகிதாச்சார அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிக்கும்பொழுதே மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் நியமனங்கள் இருக்க வேண்டும்.

இந்தியா என்பது பன்மொழிகள், கலாசாரங்கள், பண்பாடுகள் ஆகியவற்றை கொண்டிருக்கும் தேசமாக இருப்பதால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்டுவது என்பது மிகவும் அத்தியாவசியமாகிறது. எனவே, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் செய்யும்பொழுது சமூக நீதியை கடைபிடிக்கவும், மாநிலங்களுக்கான உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதை உறுதி செய்யவும் மத்திய அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: தொடர்ந்து குறைந்துவரும் கொரோனா தொற்று.. ஒரேநாளில் 17,043 பேர் டிஸ்சார்ஜ் - 7,817 பேர் பாதிப்பு!