Tamilnadu

“தமிழ்நாடு அரசின் உதவியால் பாட்டியின் முகத்தில் மகிழ்ச்சி மத்தாப்பு” - அழியாப் பதிவாக்கிய ஜாக்சன் ஹெர்பி!

தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண தொகையின் இரண்டாம் தவணையான ரூ.2 ஆயிரம் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டம் நேற்று தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கீழ கலுங்கடி பகுதியைச் சேர்ந்த வேலம்மாள் என்கிற ஏழை மூதாட்டி, ரூ.2,000 பணமும் மளிகைப் பொருட்கள் தொகுப்பும் வாங்கிய மகிழ்ச்சியோடு சிரித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

வேலம்மாள் பாட்டியின் இந்த மகிழ்ச்சி ததும்பிய புகைப்படத்தை எடுத்தவர் நாகர்கோவிலைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஜாக்சன் ஹெர்பி. மிகச்சிறப்பான தருணத்தைப் பதிவு செய்த ஜாக்சன் ஹெர்பியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

புகைப்படம் எடுத்தபோது ஜாக்சன் ஹெர்பி அந்தப் பாட்டியிடம், “இந்தப் பணத்தை என்ன செய்யப்போறீங்க” என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்தப் பாட்டி, “இந்த பணத்தை வைத்து நல்ல சேலை ஒன்றும் தேவையான பொருட்களும் வாங்கப்போகிறேன்” என்று மகிழ்ச்சியோடு கூறியிருக்கிறார்.

பாட்டியின் மகிழ்ச்சி முகம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதைக் காலத்தால் அழியாமல் புகைப்படமாக்கிய ஜாக்சன் ஹெர்பி, தமிழ்நாடு அரசால் பத்திரிகையாளரான தனக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகையிலிருந்து ரூ. 2,000-ஐ அந்தப் பாட்டியின் வீட்டிற்கே சென்று கொடுத்து உதவியிருக்கிறார்.

ஒக்கி புயல் தாக்கியபோது இவர் எடுத்த படங்கள், கொரோனா தொற்றால் பலியானவர்கள் எரியூட்டப்படும் காட்சிகளை இவர் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் தாண்டி பெரும் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

தான் எடுத்த புகைப்படங்கள் சமூகத்தில் பெரும் அலையை ஏற்படுத்துவதை எண்ணி மகிழ்கிறேன் என்றும் புகைப்பட பத்திரிகையாளராக சாதிப்பதுதான் எனது லட்சியம் என உறுதியோடு தெரிவிக்கிறார் ஜாக்சன் ஹெர்பி.

Also Read: 7 அமைச்சர்கள் பங்கேற்று டெல்டா பாசனத்துக்காக கல்லணை திறப்பு... 3.10 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி!