Tamilnadu

டேராடூன் விரைந்த சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலிஸார்.. பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா கைது?

சென்னையை அடுத்த, கேளம்பாகத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளியை சிவ சங்கர் பாபா நடத்தி வருகிறார். இந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சமூகவலைத்தளங்களில் சிவசங்கர் பாபா மீது அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் புகார்களைக் கூறியிருந்தனர்.

இதையடுத்து மாநில குழந்தை உரிமைகள் ஆணையம் சிவசங்கர் பாபாவுக்கும், பள்ளி நிர்வாகிகளுக்கும் சம்மன் அனுப்பியது. ஆனால், சிவசங்கர் பாபாவுக்கு உடல் நலம் சரியில்லை என காரணம் கூறி அவர் ஆணையத்தில் ஆஜராகவில்லை. பள்ளி நிர்வாகிகள் மட்டுமே ஆஜராகினர்.

இந்நிலையில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மூன்று மாணவிகள் புகாரளித்தனர். அதன்பேரில் போலிஸார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டார்.

இதையடுத்து மாமல்லபுரம் போலிஸார் பதிவு செய்திருந்த இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆன்மிக பயனமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்றுள்ள சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்துவதற்காக, நேற்று இரவு சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலிஸார் டேராடூன் விரைந்துள்ளனர்.

அங்கு சென்ற பின்பு சிவசங்கர் பாபாவின் உடல்நிலை குறித்து விசாரித்து மேலும் இவ்வழக்கில் ஏற்கனவே சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அவரை கைது செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க சி.பி.சி.ஐ.டி போலிஸார் லுக்-அவுட் நோட்டிஸ் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

Also Read: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை..? - கொரோனா காலத்திலும் அசராத அதானியின் பங்குகள் கடும் வீழ்ச்சி!