Tamilnadu

"தடுப்பூசி தயாரிப்பதற்கு ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" : டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு!

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி தனியார் கெமிக்கல் நிறுவனம் (சன் பார்மா) சார்பாக ரூ.30 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

இதையடுத்து, தயார்நிலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையை ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில், திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற தி.மு.க குழு தலைவருமான டி.ஆர்.பாலு திறந்துவைத்தார்.

இந்த ஆக்சிஜன் தொழில்சாலை ஒரு நாளுக்கு 30 நொயாளிகள் பயன்பெரும் வகையில் ஒரு நிமிடத்திற்கு 87 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன்கொண்டதாகும். சன் பார்மா நிறுவனம் சார்பாக 8 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய, நாடாளுமன்ற தி.மு.க குழு தலைவர் டி.பாலு, "கொரோனா தடுப்பூசிகள் தட்டுபாடு குறித்தது முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ஒன்றிய அமைச்சர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச இருக்கிறேன். தடுப்பூசி அவசியம் என்று முதலமைச்சரே கூறியுள்ளார். ஒன்றிய அரசும் அதை உணர்ந்து உள்ளது.

ஆனாலும், தடுப்பூசிகளை வாங்குவதற்கு, அல்லது தயாரிப்பதற்கு என்று எந்த நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது. ஒன்றிய அரசு தடுப்பூசிகளை தருவதாக கூறுகின்றனர். ஆனால் எப்போது என்று தெளிவாக கூறவில்லை.

செங்கல்பட்டில் உள்ள தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை மாநில அரசு கேட்டது. ஆனால் ஒன்றிய அரசு இசைவு தெரிவிக்கவில்லை, மாநில அரசுடன் சேர்ந்து தயாரிக்கவும் இசைவு தெரிவிக்கவில்லை. அவர்களே நடத்தவும் முன்னேற்பாடுகள் செய்யவில்லை.

இதேபோல் 113 ஆண்டுகளுக்கு முன் குன்னூரில் நிறுவப்பட்ட நோய்த்தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனத்தை தமிழ்நாடு அரசிடம் கொடுத்தால் கூட மருந்து தயாரிக்கலாம். மக்களுக்கு உபயோகப்படும் அளவில் தடுப்பு மருந்துகளின் பூர்த்தி செய்வது குறித்து ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Also Read: “3 வாரங்களில் பதிலளிக்க வேண்டும்” - டி.எம்.கிருஷ்ணா தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!