Tamilnadu

"சில வாரங்களில் கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழும்" : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேட்டி!

கோவையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் அதிகாரிகளிடம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிந்தித்து மேற்கொண்ட நடவடிக்கையால், உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 50 சதவீதமாக குறைந்துள்ளது.

மேலும், சில வாரங்களில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கோவை திகழும். முழு ஊரடங்கை மக்கள் முறையாகப் பின்பற்றியதால் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.

நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் ஊரகப்பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு இருப்பதால்தான் முதல்வர் செயலர்களை அனுப்பியுள்ளார். மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் முதலமைச்சர் இரண்டு முறை கோவை மாவட்டத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்" என்றார்.

Also Read: "தடுப்பூசி நிலை குறித்து தெரிவிப்பதே சரி; கையிருப்பில் 1,060 தடுப்பூசிகள்" : அமைச்சர் மா.சுப்பிரமணியன்