Tamilnadu

"மாற்றுத்திறனாளிகள் இனி இலவசமாக பயணிக்கலாம்” - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

மாற்றுத் திறனாளிகள், அவர்களுடன் பயணிக்கும் உதவியாளர் ஒருவர் நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இயங்கக்கூடிய அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை முதலமைச்சராகப் பதவியேற்ற அன்றே வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக, திருநங்கைகளுக்கும் நகரப் பேருந்துகளில் இலவச பயணம் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தங்களுக்கும் இந்த கட்டணமில்லா பயணத் திட்டத்தை அறிவிக்கவேண்டும் என மாற்றுத் திறனாளிகள் நல சங்கதினர் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் கடந்த ஜூன் 3ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத் திறனாளிகள் அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரப்பூர்வ அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது.

அதில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் மாற்றுத்திறன் உடையவர்கள் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணிக்கலாம் எனவும் அவர்களுடன் ஒரு உதவியாளரும் பயணிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்து பயணம் செய்யலாம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: "பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வழிகாட்டுதல் குழு" - அமைத்தது தமிழ்நாடு அரசு!