Tamilnadu

திட்டமிட்டபடி ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பு; தூர்வாரும் பணி விறுவிறு - அமைச்சர் MRK பன்னீர்செல்வம் உறுதி

சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள வேளாண் விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை இயக்குநர் அலுவலகத்தில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில், வேளாண்மை உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் கே.வி. முரளிதரன் உள்ளிட்ட உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர். வேளாண் துறையில் விளை பொருட்களை அதிகரித்தல் உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,

வேளாண் துறை பணிகளை செயலாளருடன் சேர்ந்து ஆய்வு செய்தோம். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல் உழவர் சந்தையை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆய்வு செய்தோம். கடந்த ஆட்சியில் உழவர் சந்தை பராமரிக்கப்படவில்லை. கொரோனா ஊரடங்கு நேரத்தில் தமிழகம் முழுவதும் தங்கு தடையின்றி காய்கறி விநியோகம் செய்து வருகிறோம். உழவர் சந்தை மீண்டும் தொடங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். எளிதாக மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கின்ற உழவர் சந்தைகளை விரிவுபடுத்த இருக்கின்றோம்.

மேட்டூர் அணை தூர்வாறும் பணி எதிர்பார்க்கப்பட்டதை விட விரைவில் நடத்தி முடிக்கப்படும். வரும் ஜூன் 12 ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும். தற்போது காவிரி டெல்டா பகுதியில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பார்வையிட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, தண்ணீர் அந்த பகுதிகளுக்கு செல்வதற்கு முன்பு தூர்வாரும் பணிகள் முடிக்க வேண்டும் என்று ஆய்வு கூட்டத்திலும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், திட்டமிட்டப்படி மேட்டூர் அணை 12 ம் தேதி திறக்கப்படும்.” எனக் கூறியுள்ளார்.

Also Read: முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த 5 திட்டங்கள்.. குவியும் பாராட்டு!