Tamilnadu

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த 5 திட்டங்கள்.. குவியும் பாராட்டு!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். மேலும் கொரோனா காலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வரும் போர்கால நடவடிக்கையை அனைத்து தலைவர்களும் பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், முத்தமிழறிஞர் கலைஞரின் 98வது பிறந்த நாளான இன்று, 14 மளிகை தொகுப்பு முதல் பூசாரிகளுக்கான நிவாரண உதவித்தொகை வரை ஐந்து திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

கொரோனா நிவாரணத் தொகையாக ஏற்கனவே முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று 2,09,81,900 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாம் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதேபோல், கொரானா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சிரமங்களை குறைக்கும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.844.51 கோடி செலவில் 14 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களில் நிலையான மாதச் சம்பளமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித் தொகையாக ரூ.4 ஆயிரம், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்கள்.

பின்னர், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 3 பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 இலட்சம் ரூபாயும், 2 மருத்துவர்கள், ஒரு காவல் ஆய்வாளர், ஒரு தலைமைக் காவலர் மற்றும் ஒரு நீதிபதி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா 25 இலட்சம் ரூபாய் என மொத்தம் ஒரு கோடியே 55 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை நிவாரண உதவித் தொகையாக முதலமைச்சர் வழங்கினார். முதலமைச்சரின் இத்தகைய நடவடிக்கை பலரும் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: 'இலக்கிய மாமணி விருது - கனவு இல்லம்' : எழுத்தாளர்களை வியப்பில் ஆழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் !