Tamilnadu

“அரவணைத்து கண்ணீர் துடைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: முதல்வரின் கோவை பயணத்திற்கு முத்தரசன் வரவேற்பு!

கொரோனா நோயாளிகளை முதல்வர் பாதுகாப்பு உடையணிந்து நேரில் சந்தித்தது அனைவரும் தெம்பூட்டும் செயல் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

ஆட்சிப் பொறுப்பை ஏற்ற வினாடியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா நோய்த் தொற்று இரண்டாம் பரவலைக் கட்டுப்படுத்தி, அந்த நோயை அடியோடு அழித்தொழிக்கும் பணியில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார். முதல்வரின் வேகத்துக் ஈடுகொடுக்கும் வகையில் அரசு எந்திரமும் சீரமைக்கப்பட்டுள்ளது.

அவசரக் கடமைகள் அடுக்கடுக்காக அணி வகுத்து வந்த போதிலும் மேற்கு மாவட்டங்களுக்கு முதல்வர் இரண்டு முறை ஆய்வுப்பயணம் செய்திருப்பது புது வரலாறாகும். கொரோனா நோயாளி என்றால் அனைவரும் ஒதுங்கி, பதுங்கி வரும் நேரத்தில் முதலமைச்சர் மருத்துவ பாதுகாப்பு உடையணிந்து, உள் நோயாளர்களை நேரில் பார்த்து நலம் விசாரித்து, குணமடைய வாழ்த்துக் கூறியது, அவர்களுக்கு மட்டும் அல்ல நாடு முழுவதும் கோவிட் 19 பாதிப்பில் உள்ள அனைவருக்கும் தெம்பூட்டி. நம்பிக்கையூட்டும் செயலாகும்.

நெருங்கிய உறவினர்கள் அல்லது நம்பகமான பாதுகாவலர்களிடம் வளரும் குழந்தைகளுக்கு மாதம் ரூபாய் மூன்றாயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் உத்தரவிட்டது, நோயை எதிர்த்துப் போராடும் நெஞ்சுரத்தை வலுப்படுத்தும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

ஜனநாயக நெறிமுறைகளில் நின்று, புதிய வகையில் செயல்படும் முற்றிலும் புது வகைப்பட்ட மக்கள் அரசை கட்டமைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சரின் நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்தி வரவேற்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #WeStandWithStalin.. எந்த முதல்வரும் செய்யத்துணியாத காரியமிது”: உதயநிதி ட்வீட்!