Tamilnadu

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை: பணி நியமன ஆணையை வழங்கினார் தமிழக முதல்வர்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் கொடும் காயமடைந்தவர்கள் 17 பேருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

2018-ம் ஆண்டு நடந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் கொடும் காயமடைந்தவர்கள் 17 பேருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் கிராம உதவியாளர்களாகவும் மற்றும் சமையலராகவும் பணிநியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில் கிராம உதவியாளராக பணிநியமனம் செய்யப்பட்டவர்களில் 16 நபர்கள் அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் இளநிலை உதவியாளர்களாகவும், ஒரு நபர் ஈப்பு ஓட்டுநராகவும் பணி நியமனம் வழங்கிட தமிழக அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கைகளை அளித்திருந்தனர்.

தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து மேற்படி நபர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் கீழ் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பேரூராட்சித் துறைகளில் 17 நபர்களுக்கு இளநிலை உதவியாளர்களாகவும், ஒரு நபருக்கு ஈப்பு ஓட்டுநராகவும் பணி நியமன ஆணைகளை இன்று (21.5.2021) மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், சமூகநலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி பி.கீதா ஜீவன், மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி கருணாநிதி, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்ள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப.,, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Also Read: “காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர வேண்டும்”: ராஜ்நாத் சிங்-கிடம் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!