Tamilnadu

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ‘வார்ரூம்’ அமைக்கப்படும் : அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி!

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகள் மட்டுமில்லாமல் தனியார் மருத்துவமனையிலும் வார்ரூம் அமைக்கப்படும் என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் தறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரை விமானநிலையத்தில் அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார்.

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தளவில், கொரோனாவை தடுக்க நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன் மற்றும் மாணிக்கம் தாகூர், ரவீந்தரநாத் மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வித பாகுபாடில்லாமல் இணைந்து செயல்பட இருக்கிறோம்.

மேலும், மதுரை மாவட்டத்தில் பரவிவரும் கொரோனாவை எப்படி கட்டுப்படுத்துவது குறித்து வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும், போர்க்கால அடிப்படையில் நாளை மறுதினம் முதல் கொரோனா அறிகுறிகள் இருக்கிறவர்களை தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு அதற்கான மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருக்கக்கூடிய அத்தனை படுக்கைகளும் நிறைவு பெறும் நிலை இருக்கிறது. எனவே லேடி டோக் கல்லூரியில் கூடுதலான படுக்கைகளுக்கு எற்படு செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் மட்டுமல்ல அருகில் இருக்கக்கூடிய மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ராஜாஜி மருத்துவமனையில் 491 பேர் இதுவரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே வேகமாகப் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த கட்சி வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு சட்டமன்ற, நாடாளுமன்ற, ஆலோசனைகள் கேட்டு, விரைவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

Also Read: சிங்கப்பூரிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர், கண்டெய்னர்கள் இறக்குமதி: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு!