Tamilnadu

சென்னையில் மட்டுமே இன்று 7,130 பேருக்கு கொரோனா தொற்று... தமிழகத்தில் இன்று 236 பேர் உயிரிழப்பு! #Covid19

சென்னையில் மட்டுமே இன்று 7,130 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,90,589 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,80,259 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 1,45,952 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 2,35,64,234 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 7,130 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,90,589 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 2,509 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,279 பேருக்கும், திருவள்ளூரில் 1,768 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 1,089 பேருக்கும் மதுரையில் 1,068 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 40 பேருக்கும் அவர்களின் மூலமாக 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 23,515 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 12,20,064 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 1,44,547 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 236 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 85 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 151 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 15,648 ஆக அதிகரித்துள்ளது.

Also Read: “கொரோனா நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சையை உறுதி செய்க” - அமைச்சரவை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உத்தரவு!