Tamilnadu

”எதிர்க்கட்சி தலைவரை நாங்கதான் தேர்ந்தெடுப்போம்” - தேர்தல் முடிந்தும் தொடரும் பாஜகவின் குடைச்சல்!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டது. இதில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று மக்களின் அமோக ஆதரவைப் பெற்றுள்ளது. 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தி.மு.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. மேலும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகிறார்.

இந்த தேர்தலில் அ.தி.மு.க 66 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க கட்சியைத் தனது கட்டுப்பாட்டிலேயே கடந்த ஐந்து ஆண்டுகளாக பா.ஜ.க வைத்திருந்தது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தால் எந்த முடிவும் எடுக்க முடியாமல், மோடியின் நடவடிக்கைக்குத் தலையாட்டி பொம்மையாகவே இருந்து வந்தனர்.

தேர்தலின் போது கூட்டணி அமைப்பதிலும், தொகுதி ஒதுக்கியதிலும் பா.ஜ.கவின் கைதான் ஓங்கியிருந்தது. பெயருக்கு மட்டுமே அ.தி.மு.க கூட்டணி என்று இருந்தது. தேர்தலின் போது எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருந்தனர் எடப்பாடியும், பன்னீர்செல்வமும்.

தற்போது, இரண்டாவது இடம் பிடித்துள்ள அ.தி.மு.க எதிர்க்கட்சி வரிசையில் அமர இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவராக பழனிசாமியா அல்லது பன்னீர்செல்வமா என்ற பஞ்சாயத்து எழுந்துள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை பா.ஜ.க தான் முடிவு செய்யும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரை பா.ஜ.க தான் தேர்வு செய்யும் என வானதி தெரிவித்திருப்பது அ.தி.மு.க கட்சி பா.ஜ.க கட்சியாக மாறிவிட்டது என்பதைக் காட்டுவதாக உள்ளது என சமூக ஆர்வலர்கள், அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read: “வெற்றிதான் பெறவில்லை; ஆனால் கோவை மக்களுக்கு பாகுபாடின்றி உறுதுணையாக இருப்பேன்” - கார்த்திகேய சிவசேனாபதி!