Tamilnadu

“ஜூஸ் குடித்தவுடனே மயங்கி விழுந்து பலி” - திருமணமான அடுத்தநாளே இளம்பெண் உயிரிழப்பு - அதிர்ச்சிக் காரணம்!?

திருமணம் செய்துகொண்ட ஒரே நாளில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த முரளி என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாணவியுடன் வீட்டைவிட்டு வெளியேறிய முரளி காட்பாடிக்கு வந்துள்ளார்.

மகள் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து போளூர் போலிஸில் புகார் அளித்தனர். போலிஸார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.

இதற்கிடையே, வள்ளிமலை முருகன் கோயிலில் வைத்து மாணவியை கடந்த 14-ம் தேதி இளைஞர் திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர், காட்பாடி கிளித்தான்பட்டறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் இருவரும் தங்கியுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு அம்மாணவி குளிர்பானம் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த முரளி மற்றும் அவரது உறவினர்கள் மாணவியை மீட்டு வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து போளூரில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையறிந்த காட்பாடி காவல்துறையினர் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவி எப்படி இறந்தார் என்பது குறித்து முரளியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்ததாகவும் குளிர்பானம் குடித்ததும் அவர் மயக்கம் ஏற்பட்டு இறந்ததாகவும் முரளி தெரிவித்துள்ளார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே மாணவி உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து போலிஸார் முரளியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: சுடுகாடு அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் தொங்கிய மர்ம நபர்... தாம்பரம் அருகில் பரபரப்பு!