Tamilnadu

13 வயது சிறுமியை 8 மாதமாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் : 2 முதியவர்கள் உள்பட 3 பேர் கைது!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே ஆர்.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல். அவர் அப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 13 வயது மகளிடம் ஆசை வார்த்தைக் கூறி, பேச தொடங்கியுள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியின் வீட்டிற்குச் சென்ற தங்கவேலு சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் இதுபற்றி சிறுமி யாரிடம் சொல்லாமல் இருந்துவந்துள்ளார்.

இந்நிலையில், குடிபோதையில் இருந்த போது, தங்கவேலு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை பற்றி, அப்பகுதியை சேர்ந்த முதியவர்கள் பெருமாள் மற்றும் குருநாதன் ஆகியோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து இரண்டு முதியவர்களும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதேபோல் இவர்கள் மூன்று பேரும் சிறுமியை மிரட்டி அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளனர். இந்நிலையில் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டவே, சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். அப்போது கடந்த 8 மாதங்களாக 3 பேரும் மிரட்டி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், 3 பேரையும் கைது செய்த போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: டாஸ்மாக் கடையில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஆத்திரம் : கழுத்து நெறித்து கொலை செய்த கொடூரம்!