Tamilnadu

“அ.தி.மு.க-பா.ம.க படுதோல்வி விரக்தியால் திட்டமிட்டு செய்யப்பட்ட இரட்டைக்கொலை”: திருமாவளவன் குற்றச்சாட்டு!

அரக்கோணத்தில் இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அதற்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான வி.சி.க தொண்டர்கள், மற்றும் மக்கள் அதிகாரம், திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

படுகொலை செய்யப்பட்ட இருவரின் குடும்பங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும், கொலையில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்பாட்டத்திற்குப் பின்னர் பேசிய திருமாவளவன், “இந்தப் படுகொலை திடீரென நடைபெற்றது அல்ல; இது நீண்ட நாட்களாக திட்டமிட்ட நடத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி படுதோல்வி அடையவுள்ளது. அந்த விரக்தியில் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து தாக்குதல் நடந்தபோதும் இந்தச் சம்பவங்கள் கலவரமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக வி.சி.கவினர் அமைதி காத்தனர்.

மதுபோதையின் காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறுவது தவறு. அ.தி.மு.க, பா.ம.க கும்பலாலும், மணல் திருடும் கும்பலாலும் இந்தப் படுகொலை திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டம் தமிழகத்தில் முறையாக செயல்படுத்தப் படுவதில்லை.

தமிழகத்தில் உள்ள அரசு அமைப்புகள் தலித் விரோதப் போக்கை கொண்டுள்ளன. இருக்கிற சட்டங்களை முறையாக செயல்படுத்தினாலே இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கலாம்.

குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்கு கிடைத்தால் போதும் அதை வைத்து பேரம் பேசினால் போதும் என்று பா.ம.க நினைக்கிறது. ஜாதிய வன்மத்தை மையமாக கொண்டு பா.ம.க செயல்படுகிறது. புதிய அரசு அமைந்தவுடன் இந்த வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

Also Read: ஆட்டை நாய் கடித்ததால் ஏற்பட்ட தகராறு... சிவகங்கை அருகே தந்தை, மகன் வெட்டிப் படுகொலை!