Tamilnadu

பசுமைத் தீர்ப்பாயத்தில் கிரிஜா வைத்தியநாதனின் நியமனத்துக்கு தடை; உரிய தகுதியில்லை என ஐகோர்ட் கருத்து!

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காலியாக இருக்கும் நிபுணத்துவ உறுப்பினர் பணியிடங்களுக்கு தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையர் ஆக பணியாற்றி ஓய்வுபெற்ற சத்யகோபால் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி அருண்குமார் வருமா ஆகிய மூவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இதில் கிரிஜா வைத்தியநாதனுக்கு உரிய அனுபவம் இல்லாத காரணத்தினால் அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Also Read: “இதை செய்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்” - பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் பேட்டி!

அந்த மனுவில், தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின் பிரிவு 5ன் படி நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்பட கூடிய நபருக்கு, 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப் பணி அனுபவமும், அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும்.

ஆனால், கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப்பணி அனுபவம் இருந்தாலும், சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளின் அனுபவம் 3 ஆண்டுகள் 6 மாதம் மட்டுமே உள்ளது என்பதால் இவரது நியமனம் தேசிய பசுமைத் தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது என்றும், அதனால் அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. சட்டப்படி தேவைப்படும் தகுதியை பெற்றிருக்க வில்லை என்றும் கிரிஜா வைத்தியநாதன் தகுதி குறித்து அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக நியமனத்திற்கு தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசானையை ஏப்ரல் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்

Also Read: “சென்னை வெள்ளத்தில் மிதப்பதை யாராலும் தடுக்க முடியாது” : பூவுலகின் நண்பர்கள் ‘பகீர்’ எச்சரிக்கை !