Tamilnadu

“IT ரெய்டு மூலம் நாங்கள் அப்பழுக்கற்றவர்கள் என நிரூபணம் செய்திருக்கிறார்கள்” - மோடி, பழனிசாமிக்கு நன்றி!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மகள் செந்தாமரையின் இல்லத்திலும், அவரது கணவர் சபரீசன் அலுவலகம், அவரது நண்பர்களின் வீடு, அலுவலகங்களிலும் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

தேர்தல் நாள் நெருங்கிவரும் நிலையில், தி.மு.க மீது அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் பா.ஜ.க அரசால் வருமான வரித்துறை ரெய்டுகள் திட்டமிட்டு ஏவப்படுவதாக அரசியல் பிரமுகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் 11 மணிநேரமாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை முடிவுற்ற பின் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “ஐந்து முறை ஆட்சியில் இருந்திருக்கிறோம். அப்போதே எங்கள் மீது எந்த வழக்கும் போட முடியவில்லை. மடியில் கனமில்லை, நாங்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை.

பதினோரு மணி நேரமாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ஒன்றும் கிடைக்கவில்லை. ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளனர். அதற்கான ரசீது காண்பிக்கப்பட்டு மீண்டும் கையில் கொடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

துருவித்துருவிப் பார்த்து பதினோரு மணி நேரம் நடைபெற்ற சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. வந்த அதிகாரிகள் வெறுங்கையோடு சென்றுள்ளனர். நாங்கள் அப்பழுக்கற்றவர்கள் என நிரூபித்துச் சென்றிருக்கும் வருமான வரித்துறையினருக்கும், வருமான வரி சோதனைக்கு ஏற்பாடு செய்த மோடி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி.

இதேபோன்று அண்ணா நகர் தொகுதி தி.மு.க வேட்பாளர் எம்.கே.மோகன் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. வங்கியிலிருந்து தேர்தல் செலவுக்காக அவர் எடுத்த நான்கு லட்ச ரூபாயில், இரண்டு லட்ச ரூபாய் செலவு செய்த நிலையில், அதற்கான ரசீதைக் காண்பித்து மீதமுள்ள இரண்டு லட்ச ரூபாயை திரும்பப் பெற்றுக்கொண்டார்.

தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜி வீட்டில் நடைபெற்ற சோதனையில் எட்டாயிரம் ரூபாயை வருமான வரித்துறை எடுத்துள்ளனர். அதற்கும் ரசீது காண்பிக்கப்பட்ட நிலையில் திரும்ப அளித்துவிட்டனர்.” எனத் தெரிவித்தார்.

Also Read: “மாநில உரிமைகளை தாரைவார்த்து காலில் விழுந்துகிடக்க நாங்கள் அதிமுக அல்ல” - மோடிக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!