Tamilnadu
“எப்படி அமைச்சரானீர்கள் என்பதை மறந்துவிட்டீர்களா விஜயபாஸ்கர்?”- பதவி போகும் நேரத்தில் ஏன் கண்ணீர் நாடகம்?
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த எடப்பாடி அரசு, சொல்லிக்கொள்ளும்படி எந்தவொரு நன்மையும் செய்யாததால், அ.தி.மு.க-வினர் தேர்தல் பிரச்சாரங்களில் பொய்களையும் அவதூறுகளையும் பரப்பி வாக்குக் கேட்டு வருகின்றனர்.
அந்தவகையில் சமீபத்தில் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, இப்போது அமைச்சரின் இந்த பேச்சைக் கேட்ட பலரும் அமைச்சரின் பழைய பேச்சுகளை குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.
கடந்த 2013ம் ஆண்டு சட்டமன்றத்தில் பேசிய விஜயபாஸ்கர், ஆந்திர மாநிலத்தில் புத்தூரில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறையினருக்கு அரசு ஊக்கத்தொகை அளித்தது குறித்துப் பேசியபோது, முத்தமிழறிஞர் கலைஞரின் முதுமை குறித்து கீழ்த்தரமான வகையில் கிண்டல் செய்தார்.
தமிழகத்தின் மூத்த அரசியல் கட்சி தலைவரை இப்படி தரம்தாழ்ந்து விமர்சித்த அமைச்சர் விஜயபாஸ்கரை கண்டிக்காமல், ஜெயலலிதா உள்ளிட்ட அ.தி.மு.கவினரும் மேசையை தட்டி வரவேற்றனர். அப்போது தி.மு.க உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தபோது, ஓ.பன்னீர்செல்வம் அவர் பொதுவாகத்தான் சொன்னார் என்று மழுப்பினார்.
அதுமட்டுமல்லாது மற்றொரு சட்டமன்ற உரையின்போது, கோயம்பேடு பட்டாசு கடையில் தண்ணீரில் நமத்துப்போன பட்டாசு என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தை குறிப்பிட்டு பேசினார். அப்போதும் முதல்வராக இருந்த ஜெயலலிதா, விஜயபாஸ்கரின் பேச்சைக் கண்டிக்காமல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.
அடுத்த நாளே சி.விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக பதவியேற்க உள்ளதாக ஆளுநர் மாளிகையிலிருந்து செய்திக் குறிப்பு வெளியானது. தரம்தாழ்ந்த விமர்சனங்கள் மூலம் தலைமையைக் குளிரவைத்து அமைச்சரான விஜயபாஸ்கர், இன்று தனது முதுமையையும், இயலாமையும் காரணம் காட்டி ஓட்டுக்கேட்பது பெரும் வேடிக்கையாக உள்ளது.
தோல்வி பயத்தால் தான் போட்டியிடும் விராலிமலை தொகுதியில் மட்டும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்சாரத்தின் போது, கொரோனா காலத்தில் தான் ஓய்வு இல்லாமல் உழைத்ததாகவும், “எனக்கும் சுகர் இருக்கு, பி.பி இருக்கு. எனக்கும் உடம்பில் கோளாறு இருக்கு. அதுக்கு மாத்திரை போட்டுக்கிட்டிருக்கேன். நானும் பத்து மணிக்குத் துாங்கி ஐந்து மணிக்கு எழுந்து, வாக்கிங் போகலாம். மதியம் ஒரு மணிநேரம் தூங்கி உடம்பைக் கவனித்துக்கொள்ளலாம். ஆனால் முடியவில்லை. உங்களுக்காக உழைக்கிறேன்” என்றும் பேசி வருகிறார்.
விஜயபாஸ்கர் அமைச்சராவதற்கு முன் பேசிய சட்டமன்றப் பேச்சையும், அமைச்சர் பதவியை இழப்போகும் நேரத்தில் தற்போது பேசும் பேச்சையும் ஒப்பிட்டு பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
“தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? 15 நாள்.. 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள்” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
”தவெக ஆட்சியில் குற்றவாளிகளின் கூடாரமாக தமிழ்நாடு.. வாய் திறப்பாரா முதல்வர் விஜய்?” : முரசொலி விமர்சனம்!
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!