Tamilnadu

“பாதாள சாக்கடை மரணங்கள் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைது” : ஐகோர்ட் அதிரடி எச்சரிக்கை !

தமிழகத்தில் பாதாள சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுவதை தடை செய்யவும், சுத்தம் செய்யும் பணியின் போது விஷ வாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய மனிதர்களை பணியமர்த்தும் பணியை ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொள்கிறதா என அறிக்கை அளிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமைதலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பல்வேறு மாநகராட்சி, நகராட்சிகளிடம் விவரங்களை கோரியுள்ளதாகவும், அந்த விவரங்களை தொகுத்து அறிக்கையாக தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கி பலியாவது தொடபான சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் எந்த குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை எனவும், பலியானவர்களின் உறவினர்கள் பலருக்கு இழப்பீடுகள் வழங்கப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 2021ம் ஆண்டு பிப்ரவரி வரை, ஆறு மரணங்கள் நடந்துள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த விசாரணையின் போது பிறப்பித்த உத்தரவின்படி அறிக்கை தாக்கல் செய்யாத அரசின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், 2017ம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யச் செய்யும் மனித தன்மையற்ற செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர்.

பாதாள சாக்கடைகளிலும், கழிவு நீர் தொட்டிகளிலும் இறங்கி சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்துவதால் ஏற்படும் மரணங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களை பொறுப்பாக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக கூறிய நீதிபதிகள், இதுபோல ஏதேனும் மரணங்கள் நிகழ்ந்தால், அதற்கு சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி ஆணையர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு, உடனடி கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச் செய்யும் நடைமுறையை தடுத்து நிறுத்த எடுத்த நடவடிக்கை குறித்தும், மரண சம்பவங்கள் தொடர்பான வழக்குகளின் புலன் விசாரணையை துரிதப்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யும்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். மேலும், பலியான தொழிலாளர்களின் உறவினர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கியதை உறுதி செய்யவும், அதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Also Read: “அண்ணன் என்ன.. தம்பி என்ன..?” - பழிக்குப் பழியாக ரவுடி வெட்டிக்கொலை : திருச்சியில் நடந்த கொடூரச் சம்பவம்!