Tamilnadu

அதிகாரியை மிரட்டிய விவகாரம் : வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட அமைச்சர் கடம்பூர் மீது வழக்கு பதிவு!

தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள், அமலில் உள்ளதால், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சட்டமன்றத் தொகுதிகளிலும் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இப்படி இருந்தபோதும், அ.தி.மு.கவினர் தருமபுரி, பழனி என தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்களைத் தாராளமாக வழங்கி வருகின்றனர். இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஆளுங்கட்சிக்குச் சாதகமாக இருந்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், ஒருசில அதிகாரிகள் நேர்மையுடன் பணியாற்றினாலும் அவர்களை இடம் மாற்றுவது, பணியிடை நீக்கம் செய்வது உள்ளிட்ட வேளைகளை ஆளும் அ.தி.மு.க அரசு செய்து வருகிறது. இதனிடையே, கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து தி.மு.க கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சீனிவாசன் போட்டியிடுகிறார். இதனால் தோல்வி பயத்தில் இருக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜு, பா.ஜ.கவால் தான் அ.தி.மு.க ஆட்சியில் இருந்தது என பிரச்சாரக் கூட்டங்களில் பேசி வருவது அ.தி.மு.கவினர் மத்தியிலேயே பெரும் சலபலப்பை ஏற்படத்தியுள்ளது.

இதையடுத்து, நேற்று முன்தினம் ஊத்துபட்டி அருகே கடம்பூர் ராஜு காரில் வந்தபோது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை அதிகாரிகள் அவரது காரையும் நிறுத்தி சோதனையிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கடம்பூர் ராஜு, காரிலிருந்து இறங்கி ‘இன்னும் பத்து நாளைக்குத்தான் நீ ஆடுவ.. அதுக்குப்பிறகு உன்னை என்ன பண்ணுறேன் பாரு..’ என்று பறக்கும்படை அதிகாரியை மிரட்டினார். அப்போது அதிகாரி ‘எங்கள் கடமையைத்தான் நாங்கள் செய்கிறோம். ஒத்துழைப்பு கொடுங்கள்’ என கூறியுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தேர்தல் பறக்கும்படை அதிகாரி மாரிமுத்து உயிர் பயத்தில் நாலாட்டின் புதூர் காவல்நிலையத்தில் அமைச்சர் மீது புகார் அளித்துள்ளார். இதனால் அமைச்சர் கடம்பூர் ராஜு தன் அதிகாரத்தை பயன்படுத்தி, தேர்தல் பறக்கும் படை குழுவிற்கு தலைமை தாங்கிய மாரிமுத்துவை, கோவில்பட்டி தொகுதியில் இருந்து, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டிருப்பது தேர்தல் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அரசு அதிகாரி தனது கடமையைதானே செய்தார். அமைச்சர் காரை நிறுத்தி சோதனை செய்வதற்கு அவருக்கு அதிகாரம் இருக்கிறது. இதனால் அவர் அமைச்சர் காரை நிறுத்தி சோதனை செய்தார். ஆனால் கடம்பூர் ராஜு தனது அதிகாரித்தைப் பயன்படுத்தி, தேர்தல் அதிகாரியை வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்திருப்பது கண்டனத்திற்குறியது.

மேலும் தன் தொகுதியில் பணத்தை தாராளமாக எடுத்து செல்வதற்காக நேர்மையாக இருந்த அதிகாரியை மாற்றம் செய்ய வைத்திருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது என சமூக ஆர்வலர்களும், எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மாரிமுத்துவை மிரட்டிய புகாரில் அமைச்சர் கடம்பூர் ராஜு மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சர் கடம்பூர் ராஜுவின் காரை பறக்கும் படையினர் சோதனை செய்ததன் காரணமாக பறக்கும் படை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்த நிலையில், இடமாற்றம் செய்யப்பட்ட பறக்கும் படை அதிகாரி மாரிமுத்து மீண்டும் அதே இடத்தில் பணி நியமனம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Also Read: நீங்க எங்க ஓட்டு கேட்டு போனாலும் அங்கு மறைக்க முடியாத ஒரே விஷயம் : தி.மு.கவும், கலைஞரும் !