Tamilnadu

தந்தை சாவுக்கு 20 ஆண்டுகள் கழித்துப் பழி வாங்கிய மகன் : ரவுடி சிவக்குமார் கொலை பற்றிய அதிர்ச்சி தகவல்கள்!

சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சிவக்குமார். இவர் மீது கொலை கொள்ளை வழிப்பறி ஆள் கடத்தல் என 40க்கும் மேற்பட்ட வழக்குகள் மைலாப்பூர், ஜாம்பஜார், ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. அதுமட்டுமின்றி சென்னை மாநகர காவல்துறை கணக்கெடுத்து வெளியிட்ட ரவுடிகளின் பட்டியலில், முக்கியமான ரவுடியாக இருந்தவர் தான் இந்த சிவக்குமார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 4ம் தேதி வழக்கு ஒன்றிற்காகத் தேடப்பட்டு வந்த மயிலாப்பூர் சிவக்குமார், உத்திரமேரூரில் தனது சகோதரி வீட்டில் தலைமறைவாக இருந்தபோது போலிஸார் துப்பாக்கி முனையில் அவரை கைது செய்தனர். அப்போது அவரிடமிருந்து பல்வேறு பயங்கரமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் ஜாமினில் வெளியே வந்த மயிலாப்பூர் சிவக்குமார், சென்னை அசோக் நகர் போஸ்டல் காலனி 2வது தெருவில் அலுவலகம் வைத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஜஸ்டின் என்பவருக்கு 10 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். அந்தக் கடன் தொகையை வசூலிப்பதற்காக, ஜஸ்டினின் அலுவலகத்திற்கு நேற்று சென்றிருக்கிறார் ரவுடி சிவக்குமார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு மர்ம கும்பல், ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்குள் புகுந்து ரவுடி சிவக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் முகம் அடையாளம் தெரியாத அளவுக்குச் சிதைந்த நிலையில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்தக் கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய முற்கட்ட விசாரணையில், பிரபல ரவுடி தோட்டம் சேகர் கொலைக்குப் பழி வாங்கவே இந்தக் கொலைச் சம்பவம் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 1997 ஆம் ஆண்டு ரவுடி தோட்டம் சேகரை, சிவக்குமார் வெட்டி படுகொலை செய்துள்ளார். இதற்கு பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தார் தோட்டம் சேகரின் மகன் அழகுராஜா. மேலும் கடந்த ஆண்டு கேசினோ திரையரங்கம் அருகே தோட்டம் சேகரின் மகன் அழகுராஜாவும், தாயார் மலர்க்கொடியுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் இவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் ரவுடி சிவக்குமாருக்கு தொடர்பு இருந்ததை அறிந்த ரவுடி அழகுராஜா, சிவக்குமாரைக் கொலை செய்யத் திட்டம் போட்டுள்ளார். இதையடுத்து ரவுடி அழகுராஜாவும், கூலிப்படை தலைவன் மதுரபாலாவின் கும்பலும் சேர்ந்த ரவுடி சிவக்குமாரை வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.

எனவே, ரவுடி சிவக்குமார் கொலைக்குப் பழிவாங்க இவரின் ஆதரவாளர்கள் எதிரிகளைக் கொலை செய்ய முயற்சிப்பார்கள் என்பதால் போலிஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

Also Read: “துப்பாக்கி முனையில் கைது.. பழி தீர்க்க நடந்த கொடூர கொலை” : தேர்தல் நேரத்தில் கொலைக்களமாகும் தமிழகம் !