Tamilnadu

திருமணம் செய்துவைப்பதாக அழைத்து மகளின் காதலனை கல்லால் அடித்துக்கொன்ற தந்தை... ஓசூரில் ’பகீர்’ ஆணவக் கொலை!

கிருஷ்ணகிரி மாவட்டம், தாண்டரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவர், பெங்களூருவில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், இவரின் பக்கத்து கடையை சேர்ந்த வசந்த், லட்சுமணனின் மகளை காதலித்து வந்துள்ளார். மகளின் காதலை அறிந்த லட்சுமணன், மகளிடம் கண்டித்துள்ளார். ஆனால், வசந்த்தை பிரிய மனமின்றி தொடர்ந்து காதலித்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன் வசந்த்தை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார். அதன்படி, வசந்திடம், "ஓசூர் அருகே உள்ள தாண்டரப்பள்ளி கிராமத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு மகளை அனுப்பியுள்ளேன். நீ வந்தால் உறவினர்களிடம் பேசி மகளை திருமணம் செய்து வைக்கிறேன்” என கூறியுள்ளார். லட்சுமணனின் பேச்சை வசந்த் நம்பியுள்ளார்.

இதையடுத்து, வசந்த், லட்சுமணன் இருவரும் சம்பவத்தன்று நன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது, போதையிலிருந்த வசந்த்தை உருட்டுக் கட்டை , கற்களைக் கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளார் லட்சுமணன். இந்த தாக்குதலில் வசந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் லட்சுமணன் பேரிகை காவல் நிலையத்தில் சரணடைந்து, நடந்த சம்பவம் குறித்து போலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து போலிஸார் லட்சுமணனை கைது செய்து சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் வசந்த் உடலை மீட்ட போலிஸார் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தக் கொலை ஜாதி ரீதியாக நடந்த ஆணவக் கொலையா என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: சேட்டை குரங்கிடம் தப்பிக்க சிலையாக உறைந்த சிறுவன்: விருதுநகரில் சுவாரஸ்யம்! (வீடியோ)