Tamilnadu

அதிமுகவோடு இணைந்து ராஜேஷ்தாஸ் நடத்திய வெறியாட்டம் : பதைபதைக்க செய்யும் பரமக்குடி துப்பாக்கிச்சூடு வீடியோ!

சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி-யாக பொறுப்பு வகித்து வந்த ராஜேஷ் தாஸ், பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், தரமிறக்கம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். பாலியல் புகாரில் ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் புகாரில் ராஜேஷ் தாஸ் மீது சி.பி.சி.ஐ.டி போலிஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் மூலம் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பாலியல் குற்றச்சாட்டுகள் தவிர வேறு பல புகார்களும் ராஜேஷ் தாஸ் மீது உள்ளன. தென்மண்டல ஐ.ஜி-யாக பணியாற்றியபோது, முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை மிரட்டியது, பரமக்குடியில் இமானுவேல் சேகரன் குருபூஜையின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமானது என பல்வேறு சர்ச்சைகள் அணைகட்டுகின்றன.

2011ம் ஆண்டு பரமக்குடி அருகே 15 வயதுச் சிறுவன் பழனிக்குமார் கொல்லப்பட்ட நிலையில், அச்சிறுவனின் வீட்டுக்குச் சென்ற ஜான் பாண்டியன் போலிஸாரால் தடுக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரமக்குடியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமாதானப்படுத்த எவ்விதப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாமல், எவ்வித முன்னறிவிப்புமின்றி தடியடி நடத்திய காவல்துறையினர், உடனடியாக துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலும், ஒருவர் மருத்துவமனையிலும் மற்றும் 2 பேர் தடியடியிலும் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களில் போலிஸாரின் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தவர்கள் 9 பேர். அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற இக்கோரத் தாக்குதலின்போது தென்மண்டல ஐ.ஜியாக இருந்தவர் சாட்சாத் ராஜேஷ் தாஸ்.

பரமக்குடில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு பற்றிய வீடியோ காட்சி தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திடீர் போலிஸ் தாக்குதலால் மக்கள் ஓடுவதும், போலிஸார் குறிவைத்துச் சுடுவதும் இக்காட்சியில் பதிவாகியுள்ளது.

நேர்மையான நிர்வாகத் திறனின்றி அடாவடி நடவடிக்கைகளுக்குப் பெயர்போன ராஜேஷ் தாஸின் தலைமைக்குக் கீழ் தென் மாவட்டங்களில் பல்வேறு வன்முறைகள் நிகழ்ந்ததை காவல்துறையினரே ஒப்புக்கொள்கிறார்கள்.

Also Read: “காரிலேயே கைகளில் முத்தமிட்டார்” - ராஜேஷ் தாஸ் மீதான எஃப்.ஐ.ஆர் மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!