Tamilnadu

தமிழ்நாடு நில ஆர்ஜித சட்ட வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!

2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு நில ஆர்ஜித சட்டத்துக்கான ஒப்புதலைப் பெற குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்த ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு நில ஆர்ஜித சட்டத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கின் வாதங்கள் இன்று முடிவடைந்த நிலையில், தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட 2015 ஆம் ஆண்டு நில ஆர்ஜித சட்டத்துக்கு உயிரூட்டும் நோக்கத்தில் 2019 ஆண்டு நில ஆர்ஜித சட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்தது. விவசாயிகளைப் பாதிக்கும் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று திருவள்ளூரை சேர்ந்த மோகன் ராவ், சுனிதா, கோவிந்தராஜ் உள்ளிட்ட 55 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

தமிழக அரசின் இந்த 2019 நில ஆர்ஜித சட்டம், விவசாய விளைநிலங்களை விரைந்து கையகப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. எட்டுவழிச்சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த இந்த சட்டம்தான் பயன்படுத்தப்பட்டது. விவசாயிகளை மிக மோசமாகப் பாதிக்கும் இந்த சட்டத்தை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் வில்சன் கடந்த முறை வாதிட்டார்.

மேலும், 2013 மத்திய சட்டத்துக்கு எதிரான இந்த சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியது தவறானது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து குடியரசு தலைவரின் ஒப்புதலைப்பெற தமிழக அரசு அனுப்பிய ஆவணங்களை நாளை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இரு தரப்பும் ஒருவாரத்தில் எழுத்துபூர்வமான வாதங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பு வழங்குவதற்காக வழக்கை தேதி குறிப்பிடப்படாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Also Read: “தமிழக நிதிநிலையை சரிசெய்ய அடுத்து வரும் அரசுக்கு 3 ஆண்டுகள் தேவைப்படும்” - நிதித்துறை செயலர் தகவல்!