EPS & OPS
Tamilnadu

பிப்.24ம் தேதி வீட்டில் தீபம் ஏற்ற OPS - EPS உத்தரவு : முழுக்க முழுக்க மோடியின் ஜெராக்ஸாக மாறிய அதிமுக!

உலக நாடுகளில் கொரோனா மிகப் பெரிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போதும் கூட, இந்தியாவில் அதனைப் பற்றிக் கவலைப்படாமல், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல், கைத்தட்டச் சொல்லியும், விளக்கேற்றச் சொல்லியும் வீட்டில் இருப்பவர்களுக்கு அவ்வப்போது டாஸ்க் கொடுத்து வந்தார் பிரதமர் மோடி.

இந்நிலையில், பா.ஜ.க கட்சியின் கூட்டணி கட்சி என்ற நிலைமாறி, தாங்களும் பா.ஜ.கவின் ஒரு அங்கம் என்பது போலவே மாறிய தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க, தங்கள் எஜமானர் மோடி கொடுத்த கொரோனா டாஸ்க் அனைத்தையுமே மகிழ்வித்து செய்து வந்தது.

முன்னதாக கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கிய நேரத்தில், இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கேற்றும்படியும், டார்ச் லைட் அடிக்கும்படியும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையடுத்து, அவரது அபிமானிகளும், விசுவாசிகளும் அதற்கு பின்னணியில் விஞ்ஞானமே ஒளிந்துள்ளது என கட்டுக்கதைகளை சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர். ஆனால் நாளடைவில் பிரதமர் சொன்ன அறிவிப்பு அனைத்தும் வெற்று முழக்கம் என மக்களும் உணர்ந்தனர்.

அதன்பின்னர் கடுமையான விமர்சனத்திற்கு ஆளான மோடி, அவ்வபோது தனது தோற்றுப்போன அறிவிப்புக்காக நீலக்கண்ணீர் வடிப்பார். இதனிடையே, பா.ஜ.க இந்துத்வா கொள்கை, இந்தி திணிப்பு, சமஸ்கிருதம் புகுத்துவது போன்ற பாணியை, அச்சு பிறழாமல் செய்து வருகிறது எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அரசு.

இதனால் விரக்தி அடைந்த தொண்டர்கள் பலர் தி.மு.கவிற்கும் இன்னும் சிலர் அரசியலை விட்டே சென்றுள்ள நிலையில், சிலர் மட்டும் இரட்டை இல்லை சின்னத்தில் மோடியின் படத்தை அச்சுட்டு உலாவி வருகின்றன.

அதன்தொடர்ச்சியாக தற்போது, மோடி பின்பற்றிய டார்ச் லைட் அடிக்கும் டாஸ்கை தனது தொண்டர்களுக்குக் கொடுத்துள்ளார்கள் எடப்பாடியும் பன்னீர்செல்வமும். “அணையப் போகிற விளக்குதான் பிரகாசமாக எரியும்” என்று தமிழில் கூட ஒரு அழகான பழமொழி உண்டு. அதான் நிலைமைதான் தற்போது இந்த எடப்பாடி ஆட்சிக்கும் உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக குறிப்பாக, கொரோனா காலம் தொடங்கி ஆட்சி முடிய போகும் இந்த கடைசி மூன்று மாதங்கள் வரை டெண்டர் விட்டு அதன்மூலம் கொள்ளையடிக்கும் இந்த ஊழல் ஆட்சி இன்னும் 3 மாதங்களில் முடியபோவதை உணராமல் தொண்டர்களை வருகிற பிப்ரவரி 24ம் தேதி, அ.தி.மு.க.,வை காக்க தீபம் ஏற்றுங்கள் என செல்லியிருக்கிறார்கள் எடப்பாடியும், பன்னீரும்.

இத்தகைய அறிவிப்பை பார்த்த பலரும் இது மோடி சொன்னது போல அறிவிப்பு என்றும் அல்லது அதே ஜெராக்ஸாக உள்ளதாக ஆளும் அ.தி.மு.க அரசை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Also Read: பொருளாதார வீழ்ச்சியடைந்துள்ள தமிழகம் எப்படி வெற்றி நடை போடும்? - தி.மு.க எம்.எல்.ஏ பி.டி.ஆர் கேள்வி!