Tamilnadu

அ.தி.மு.க அரசின் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் : தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு !

அ.தி.மு.க அரசின் சாதனைகளை பட்டியலிட்டு வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் அரசு செலவில் விளம்பரம் வெளியிடுவதை எதிர்த்து தி.மு.க தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், தமிழக அரசின் சார்பில், அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு, வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில், பத்திரிகை, தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடப்படுகிறது.

இந்த விளம்பரங்களுக்கு தடை விதிக்க கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் அத்தொகையை அதிமுக கட்சியிடம் வசூலிக்க உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், உடல் நலனுக்காக பயன்படுத்த வேண்டிய நிதி கடந்த 2 மாதங்களாக விளம்பரங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், முதல்வர் வேட்பாளர் மற்றும் ஆளும் கட்சியே முன்னிலை படுத்தும் வகையில் வெளியிடப்படும் இதை தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணையம் தரப்பு மூத்த வழக்கறிஞர் ராஜகோபால், இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.கவிடம் விளக்கம் கேட்டு பெற்றுள்ளதாகவும், அதை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதால், மனுவுக்கு விரிவாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார். இந்த வழக்கு விசாரணையை மார்ச் 2ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், வழக்குகள் தொடர்பாக பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Also Read: #ADMKஊழல்2.O: 200 ஏக்கர் நிலங்களை ரியல் எஸ்டேட்டாக மாற்றிய அமைச்சர் கருப்பண்ணன்: ஆளுநரிடம் தி.மு.க புகார்