Tamilnadu

“8 மாதங்களாக சம்பளம் வழங்காத அரசால் மதுரையில் தூய்மைப் பணியாளர் தற்கொலை” - மு.க.ஸ்டாலின் வேதனை!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்ற வந்த வேல்முருகன், 8 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் தற்கொலை செய்துகொண்டது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

மதுரை வண்டியூரை சேர்ந்த வேல்முருகன் என்பவர், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேல்முருகன் மதுரை ஆட்சியர் அலுவலக மொட்டை மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று முன் தினம் பகல் முழுவதும் தூய்மைப் பணி செய்த வேல்முருகன், இரவு வீட்டுக்குச் செல்லாமல் ஆட்சியர் அலுவலகத்திலேயே தங்கியுள்ளார். நேற்று காலை ஆட்சியர் அலுவலக பழைய கட்டிடத்தின் மேல்மாடிக்கு பணியாளர்கள் வேலைக்கு சென்றபோது அங்கு தூய்மை பணியாளர் வேல்முருகன், தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த 8 மாதங்களாக வேல்முருகனுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்றும், இதனால் குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்டதாகவும் அதன் காரணமாகத்தான் அவர் தற்கொலை செய்துகொண்டிருப்பார் என்றும் வேல்முருகனின் மனைவி கிருஷ்ணபூச்சி வேதனையுடன் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து கோவையில் இன்று பேசியுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “இன்றைக்கு காலையில் கூட ஒரு மோசமான செய்தியை பத்திரிகையில் ஒன்றில் படித்தேன். மிகவும் சோகமான செய்தி. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர் வேல்முருகன் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற அந்தச் செய்தியைப் படித்தபோது உள்ளபடியே நான் வேதனைப்பட்டேன்.

8 மாதங்களாக சம்பளம் வழங்காமல் இருந்த காரணத்தினால் விரக்தியில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இது பற்றி அரசு கண்டுகொள்ளவே இல்லை. இதனால்தான் நான் சொல்கிறேன், இந்த ஆட்சியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “ஆட்சி அமைத்ததும், அ.தி.மு.கவினர் செய்துவரும் ரவுடியிஸத்தை ஒடுக்குவதே முதல் வேலை” - மு.க.ஸ்டாலின் உறுதி!