Tamilnadu

கோயிலில் பிச்சை எடுப்பவர்களிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரி : புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்!

புதுக்கோட்டை கீழராஜ வீதி அருகே உள்ளது சாந்தநாதர் சுவாமி கோவில். இந்த கோவிலுக்குத் தினந்தோறும் அதிகமான பக்தர்கள் வந்து சொல்வார்கள். இதனால் கோவிலின் வெளியே யாசகம் கேட்பவர்கள் சிலர் அமர்ந்திருப்பார்கள்.

இந்நிலையில், தை அமாவாசை தினத்தன்று பிச்சை எடுக்க வந்தவர்களிடம் கோவில் ஊழியர் இந்திராணி என்பவர் தலா 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார். அதேபோல், அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்கும் தொழில் செய்யும் புரோகிதர்களிடமும் தலா 1,600 ரூபாய் லஞ்சம் வாங்கியிருக்கிறார்.

இதுகுறித்து புரோகிதர்களும், பிச்சைக்காரர்களும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். பின்னர் காவல்துறையிடம் இது பற்றி புகார் அளித்தனர். பிறகு காவல்துறையினர், இந்திராணியிடம் இனி பணம் வசூலிக்கக்கூடாது என்று சொல்லி, மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் திருப்பி அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் அதிகமாகப் பகிரப்பட்டதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், இது குறித்தான விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட போலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடிவரும் நிலையில், பிச்சைக்காரர்களிடமும் லஞ்சம் வாங்கியிருப்பது தமிழகத்திற்கு அவமானகரமான செயலாக அமைந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.