Tamilnadu

“உதவி கேட்ட ஏழைப் பெண்ணுக்கு சீர்” - திருமணத்தை நடத்திவைத்து அசத்திய தி.மு.க எம்.எல்.ஏ சரவணன்!

அவனியாபுரம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் ஆனந்தஜோதி. இவரது கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் மறைந்த பின்னர், வீட்டு வேலை செய்து தனது நான்கு பிள்ளைகளுடன் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார் ஆனந்தஜோதி.

திருமண வயதை எட்டிய தனது மகள் அபிராமிக்கு திருமணம் செய்து வைக்க போதிய பணம் இல்லாததால், செய்வதறியாது திகைத்து வந்த ஆனந்தஜோதி, தி.மு.க எம்.எல்.ஏ சரவணனிடம் இதுகுறித்து தெரிவித்து உதவி கோரியுள்ளார்.

தனது தொகுதியைச் சார்ந்த தந்தை இல்லாத இளம்பெண்ணான அபிராமியின் குடும்ப நிலை அறிந்த திருப்பரங்குன்றம் தி.மு.க எம்.எல்.ஏ டாக்டர் சரவணன், திருமணத்தை முன்னின்று நடத்திக்கொடுத்து, அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அபிராமியின் திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில், மணமக்களுக்கு சீராக பீரோ, கட்டில், மிக்ஸி, கிரைண்டர், குக்கர், கேஸ் அடுப்பு, எவர்சில்வர் - பித்தளை பாத்திரங்கள் உள்ளிட்ட திருமண சீர் பொருட்களை வழங்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளார் சரவணன் எம்.எல்.ஏ.

திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய டாக்டர். சரவணன் எம்.எல்.ஏ, திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் மதிய விருந்து வழங்க ஏற்பாடு செய்து, மணமக்களோடு சேர்ந்து உணவருந்தினார்.

வறுமையால் வாடிய பெண்ணின் திருமணத்தை தி.மு.க எம்.எல்.ஏ, சீர் வழங்கி சிறப்பாக நடத்திய நிகழ்வு, ஆனந்தஜோதி குடும்பத்தினர் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தொகுதி மக்கள் மத்தியிலும் வெகுவான பாராட்டைப் பெற்றுள்ளது.

Also Read: மருத்துவ உதவி கேட்ட குழந்தைக்கு தி.மு.க 2 லட்சம் நிதிஉதவி: குழந்தையின் தாய்க்கு மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!