Tamilnadu

“இடம் தெரியாமல் குரைக்க வேண்டாம்” : பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி.டி ரவிக்கு முரசொலி பதிலடி!

கர்நாடக மாநிலத்தில் என்ன அரசியல் நடக்கிறது என்பது தெரியாமலோ, அங்கே அதைக் கேட்டிட வக்கற்றோ, தமிழகத்தில் வந்து தனது அரசியல் கால்வேக்காட்டுத்தனத்தைக் காட்டியிருக்கிறார் என தமிழக பா.ஜ.கவுக்கு மேலிடப் பொறுப்பாளராக, சி.டி.ரவிக்கு முரசொலி நாளிதழ் பதிலடிக் கொடுத்துள்ளது.

இதுதொடர்பாக முரசொலி நாளிதழ் வெளிவந்துள்ள பதிவு பின்வருமாரு, “தமிழக பாஜகவுக்கு மேலிடப் பொறுப்பாளராக, சி.டி.ரவி எனும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டு பா.ஜ.க தலைவர்தான் அரைவேக்காட்டு அரசியல்வாதி என்று நினைத்திருந்தோம். மேலிடப் பொறுப்பாளரான இவரோ, அரைவேக்காடு கூட அல்ல, கால்வேக்காடாக இருப்பார் போல தெரிகிறது.

அவர் செய்தியாளர் பேட்டி ஒன்றில், வாரிசு அரசியல்தான் திராவிட அரசியலா? என எதையோ கண்டுபிடித்தது போல உளறிக் கொட்டியிருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் என்ன அரசியல் நடக்கிறது என்பது தெரியாமலோ, அங்கே அதைக் கேட்டிட வக்கற்றோ, தமிழகத்தில் வந்து தனது அரசியல் கால்வேக்காட்டுத்தனத்தைக் காட்டியிருக்கிறார்.

இவர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள கர்நாடக மாநிலத்தில், எடியூரப்பா மாநில முதலமைச்சர், அவருடைய ஒரு மகன் விஜயேந்திரா, பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர். மற்றொருவரான ராகவேந்திரா, பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர். கர்நாடக பாஜகவில் நடைபெறும் இந்த அரசியலுக்குப் பெயர் என்ன என்பதை சி.டி.ரவி கூறுவாரா?

அங்கே வாலை ஆட்டாமல் சுருட்டிக்கொண்டிருந்துவிட்டு, தமிழகத்திற்குள் வாலை நீட்டுகிறார். இடம் தெரியாமல் குரைக்கிறார். சி.டி.ரவிக்குத் தெரிவித்துக்கொள்கிறோம், தமிழக அரசியல் களம் வேறுபட்டது. இங்கு பிறந்த குழந்தை கேட்கும் தாலாட்டே அரசியல் கலந்தது. ரவி வாலை நீட்டினால், வசமாக வாங்கிக் கட்ட நேரிடும்.”எனத் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: கொரோனா ஊரடங்கு : பள்ளி ஆசிரியரான 12 வயது சிறுமி - சர்வதேச அளவில் குவியும் பாராட்டுகள்