Tamilnadu

“உதவி மருத்துவர்கள் பணி நியமனத்தில் SC/ST இடஒதுக்கீடை பின்பற்றாத அ.தி.மு.க அரசு” - மருத்துவர்கள் கண்டனம்!

அரசு உதவி மருத்துவர்கள் 284 பேர் பணி நியமனம் செய்யப்பட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை சரியான முறையில் பின்பற்றாமல் சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைத்துள்ளது அ.தி.மு.க அரசு.

நல்ல மதிப்பெண் பெற்ற பலர் தொலைதூரங்களில் உள்ள மாவட்டங்களிலும், குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் சொந்த மாவட்டங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இட ஒதுக்கீட்டை குழி தோண்டிப் புதைத்துள்ள அரசின் நடவடிக்கைக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கையில், “அரசு உதவி மருத்துவர்கள் 284 பேர் பணி நியமனத்தில் SC/ ST இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வில்லை. இட ஒதுக்கீட்டை தமிழக அரசு குழி தோண்டி புதைத்துள்ளது. கவுன்சிலிங் நடத்தி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட வில்லை.

இதனால் நல்ல மதிப்பெண் பெற்றோர், தங்கள் சொந்த மாவட்டத்தை தாண்டி தொலைதூரங்களில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம் பலர் குறைவான மதிப்பெண் பெற்றும் சொந்த ஊரின் அருகிலேயே பணியிடங்களை பெற்றுள்ளனர். இது அப்பட்டமான முறைகேடாகும்.

மினி கிளினிக்குகளில் காலிப் பணியிடங்கள் இருந்த போதிலும், எம்.ஆர்.பி தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பும் நிறைவு பெற்று பணி நியமனத்திற்காக காத்திருக்கும் மருத்துவர்கள் பணிநியமன ஆணைகள் வழங்கப்படாதது கடும் கண்டனத்திற்குரியது.

மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படுவதில் ஊழல், முறைகேடுகள், சமூக நீதிக்கு எதிரான போக்குகள் தொடர்ந்து நீடிப்பது கடும் கண்டனத்திற்குரியது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “அவதூறு வழக்குகளை திசைதிருப்ப முயலும் அ.தி.மு.க அரசு” - நீதிமன்றத்தில் தி.மு.க தலைவர் தரப்பு கண்டனம்!