Tamilnadu
“NLC-ல் வட மாநில இளைஞர்களை நியமித்து மண்ணின் மைந்தர்களை புறக்கணிப்பது சதி” - மோடி அரசுக்கு வைகோ கண்டனம்!
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் தமிழகத்தைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்காமல் புறக்கணித்துள்ளதற்கு மத்திய அரசை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “மத்திய பா.ஜ.க. அரசு, தமிழகத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை பணி நியமனம் செய்து வருகிறது. குறிப்பாக இரயில்வே துறை, திருச்சி பாரத் மிகுமின் நிறுவனம், அஞ்சல் துறை போன்றவற்றில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது இல்லை.
தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த பொதுத்துறை நிறுவனமாகவும், நவரத்னா தகுதியைப் பெற்ற நிறுவனமாகவும் செயல்பட்டு வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பணி நியமனங்களில் வட மாநிலத்தினர் எல்லா நிலையிலும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், என்.எல்.சி. நிறுவனம் கடந்த பிப்ரவரி 2020 இல் நிர்வாக பட்டதாரி பயிற்சியாளர் (Graduate Excutive Trainee) 259 இடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மேலாண்மை பட்டதாரிகளைத் தேர்வு செய்ய அறிவிப்பு ஆணை வெளியிட்டு இருக்கிறது.
பின்னர் அதற்கான எழுத்துத் தேர்வுகளும் நடைபெற்றன. இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில், தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்களிலிருந்து 1582 பேரை அடுத்த கட்ட நேர்முகத் தேர்வுக்கு என்.எல்.சி. நிறுவனம் முன்னுரிமைப் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில், தமிழகத்திலிருந்து வெறும் 8 பேர் மட்டுமே இடம்பெற்று உள்ளனர்.
ஜி.இ.டி. (GET) எனப்படும் இந்தப் பயிற்சி முடித்தவர்கள் என்.எல்.சி.யில் லட்சக்கணக்கில் ஊதியம் பெறும் அதிகாரிகளாக பணியில் அமர்த்தப்படுவார்கள். இ த்தகைய பணிகளில் 259 காலி இடங்களில் நூறு சதவீதம் குஜராத், உ.பி., பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
என்.எல்.சி. நிறுவனத்திற்காக தங்கள் நிலங்களையும், வீடுகளையும் இழந்த மண்ணின் மைந்தர்களையும், தமிழ்நாட்டு இளைஞர்களையும் புறக்கணித்துவிட்டு, வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களை நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பொறியாளர்களாக தேர்வு செய்யும் சதியை ஏற்கவே முடியாது. இது கடும் கண்டனத்துக்கு உரியது.
என்.எல்.சி. நிறுவனம் தேர்வு செய்து வெளியிட்டுள்ள நேர்முகத் தேர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலை இரத்துச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் பொறியியல் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு அளிக்க வேண்டும். இல்லையேல் மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
7-வது முறையாக.. மகளிர் டி20 சாம்பியனான ஆஸ்திரேலியா.. சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு தொடரும் சோகம்!
-
மக்களுக்கு வழங்கும் ‘பை’யில் கூட ஊழல்! : த.வெ.க.வின் முகமூடியை கிழித்து காய வைத்த பெண்!
-
பிரேசிலின் நம்பிக்கை... இறுதி விசிலுடன் உடைந்த கனவு - கண்ணீரில் முடிந்த நெய்மரின் உலகக் கோப்பை பயணம்!
-
கோவையில் 1000 சவரன் நகை திருட்டு : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
-
“ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா?” : தி.மு.க கடும் கண்டனம்!