Tamilnadu

நிலத்தை கைப்பற்ற கொடூரமாகத் தாக்கிய அ.தி.மு.க எம்.பி-யின் மருமகன்... மனமுடைந்த இளைஞர் தற்கொலை!

அ.தி.மு.க-வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மருமகன், வினோத்குமார் எனும் இளைஞர் மற்றும் அவரது பெற்றோரை கண்மூடித்தனமாக தாக்கியதால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்தின் மருமகன் கார்த்தி என்பவருக்கும், அவரது வீட்டின் அருகில் புதூர் கிராமத்தில் வசிக்கும் கோவிந்தராஜன் என்பவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நிலத்தகராறு நிலவி வந்துள்ளது. கோவிந்தராஜனுக்கு சொந்தமான நிலத்தை எம்.பி வைத்திலிங்கத்தின் மருமகன் கைப்பற்ற முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று கோவிந்தராஜன் வீட்டிற்குச் சென்ற, வைத்திலிங்கத்தின் மருமகன் கார்த்தி மற்றும் அவரது சகோதரி மகன் ஆனந்த் உள்ளிட்டவர்கள் கோவிந்தராஜனின் மகன் வினோத்தை கடுமையாக தாக்கியுள்ளனர். தடுக்க வந்த வினோத்தின் பெற்றோரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ய மறுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த வினோத், நேற்று இரவு கழுத்தில் காயத்தோடு தூக்கில் தொங்கிய நிலையில் சடலாக மீட்கப்பட்டுள்ளார்.

வினோத் மரணத்திற்கு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் உறவினர்களே காரணம் என்றும், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யும் வரை வீட்டில் இருந்து உடலை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என வினோத்தின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சுமார் 8 மணிநேரத்திற்கு பிறகு போலிசார் வழக்கு பதிய சம்மதம் தெரிவித்ததையடுத்து பிரேத பரிசோதனைக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

Also Read: “விவசாயிகளை டெல்லிக்குள் அனுமதிக்காத மோடியை தமிழகம் வர அனுமதிக்க மாட்டோம்” - பி.ஆர்.பாண்டியன் பேட்டி!