Tamilnadu

“அ.தி.மு.கவை உடைப்பதில் வேண்டுமானால் பா.ஜ.க வெற்றி பெறலாமே தவிர, இங்கு காலூன்ற முடியாது”: மு.க.ஸ்டாலின்

‘இந்தியா டுடே’ ஆங்கில செய்தித் தொலைக்காட்சிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புப் பேட்டி அளித்தார்.

தமிழ்நாடு அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் களத்திற்குத் தயாராகி வருகிறது. தமிழ்நாட்டின் முக்கிய தலைவராக இருந்த கலைஞர் அவர்களின் முகமாகத் திகழும் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத் தலைவர் மட்டுமல்லாது முக்கிய தேசிய தலைவராகவும் உருவெடுத்து வருகிறார்; அவர் வேலூர் தேர்தல் பிரச்சாரத்திற்கிடையே “இந்தியா டுடே’’ இதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலின் தமிழாக்கம் வருமாறு - பகுதி 02 :

கேள்வி: அ.தி.மு.க.வை உடைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. இப்பொழுது சசிகலா விடுதலையாகி வருகிறார்; இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோரிடையே பிரச்சினைகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள்; இவ்வளவு குளறுபடிகளுக்கும் பா.ஜ.க.தான் காரணம் என்று சொல்லலாமா?

மு.க.ஸ்டாலின்: ஆமாம், நிச்சயமாக! அவர்கள் சொல்வதுதானே இங்கே நடைபெறுகிறது. அவர்கள் சொல்வதைத்தானே இங்கே இவர்கள் கடைபிடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். அ.தி.மு.க.வை உடைப்பதில் வேண்டுமானால் பா.ஜ.க. வெற்றி பெறலாமே தவிர, நிச்சயமாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அவர்களால் காலூன்ற முடியாது. ஏனென்றால், அந்த அளவிற்குத் தமிழர்களுக்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதினால், அந்த வாய்ப்பே அவர்களுக்குக் கிடையாது.

அ.தி.மு.க. என்பதே கரப்ஷன் - கமிஷன் - கலெக்ஷன்!

கேள்வி: அ.தி.மு.க.மீது பல குற்றச்சாட்டுகளை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்; ஆளுநரிடமும் மனு கொடுத்திருக்கிறீர்கள். மக்கள் ஏன் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்கக்கூடாது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

மு.க.ஸ்டாலின்: அ.தி.மு.க என்பதே, ஊழல், ஊழல், ஊழல். கரப்ஷன் - கமிசன் - கலெக்சன் என்றுதான் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றேன். அண்மையில்கூட நான், தமிழக ஆளுநரை சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் கடைசியாக இருக்கின்ற அமைச்சர் வரை செய்திருக்கின்ற ஊழலைப்பற்றி மனு கொடுத்திருக்கின்றோம்.

உதாரணமாக சொல்லவேண்டுமானால், எடப்பாடி பழனிசாமி அவர்கள், 3000 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டரை, தன்னுடைய சம்மந்தியினுடைய சம்மந்திக்கு கொடுத்தது பற்றி, ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

உயர்நீதிமன்றமும் அந்த வழக்கை ஏற்றுக்கொண்டதோடு, இதில் உண்மை இருக்கிறது; இதனை சி.பி.ஐ விசாரிக்கவேண்டும் என்று உத்தரவு போட்டது. அந்த வழக்கில், எடப்பாடி பழனிசாமி அவர்கள் தடை வாங்கியிருக்கிறார். அவருக்கு தைரியமிருந்தால், தான் குற்றவாளி இல்லை என்றால், அந்த வழக்கைச் சந்தித்திருக்க வேண்டும். பயம் ஏற்பட்டதின் காரணமாக, அவர் அந்த வழக்கிற்குத் தடை வாங்கியிருக்கிறார்.

எஸ்.பி.வேலுமணி ஊழலாட்சித் துறை அமைச்சர்!

இன்னும் ஆதாரத்தோடு சொல்லவேண்டுமானால், எடப்பாடியைவிட, அதிகமாக ஊழல் செய்துகொண்டிருக்கின்ற ஒரு அமைச்சர் இருக்கிறார் என்றால், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிதான். உள்ளாட்சித்துறை அமைச்சர் என்று சொல்லக்கூடாது - ஊழல் ஆட்சித் துறை அமைச்சர் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் அதிகமான அளவிற்குக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், அரசு சார்பில் எல்.இ.டி பல்பு வாங்கியிருக்கிறார்கள். வெளிமார்க்கெட்டில் அந்த எல்.இ.டி பல்பின் விலை 1,550 ரூபாய். (அதற்கான ஆதாரத்தை “இந்தியா டுடே” சிறப்புச் செய்தியாளரிடம் தளபதி கொடுத்தார்) ஆனால், அரசு வாங்கியிருக்கும் விலையோ 14,997 ரூபாய். இதனை ஆதாரத்தோடு ஆளுநரிடம் மனுவாகக் கொடுத்திருக்கிறோம்.

3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறவேண்டும்!

அதைவிட இன்னொரு பெரிய குற்றச்சாட்டு என்னவென்றால், இந்த டெண்டரும் வேலுமணியின் சொந்தக்காரர்கள், பினாமிகளுக்குத்தான். அதனையும் வழக்கில் சேர்த்திருக்கிறோம். ஆளுநரிடம் அந்தப் பெயர்ப் பட்டியலையும் கொடுத்திருக்கிறோம். (அந்தப்பட்டியலையும் செய்தியாளரிடம் கொடுத்தார் தளபதி).

கேள்வி: குடியரசு நாளன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடைபெற்ற பொழுது நடைபெற்ற சம்பவம் கருப்பு நாளாக மாறியது. அது பற்றி உங்கள் கருத்து?

மு.க.ஸ்டாலின்: மிகவும் வேதனையாகவும், வருத்தமாகவும் இருந்தது. 65 நாள்களுக்கு மேலாக கடும் குளிர், மழை, வெயில் எதையும் பொருட்படுத்தாமல், குடும்பத்தோடு அங்கேயே சமைத்து சாப்பிட்டு, போராட்டத்தை அமைதியாக விவசாயிகள் நடத்திக் கொண்டிருந்தார்கள்.

அவர் நடத்திய டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட கலவரத்தைப் பார்த்து, இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ளவர்கள் வேதனைப்பட்டார்கள், கவலைப்பட்டார்கள். பிரதமர் மோடி, போராட்டம் நடத்தியவர்களை சந்தித்துப் பேசியிருக்க வேண்டும்; அல்லது அழைத்துப் பேசியிருக்க வேண்டும். இதுவரைக்கும் அவர் அதனை செய்யவில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்று.

எங்களைப் பொறுத்தவரையில், மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும் என்பதுதான் விவசாயிகளுடைய கோரிக்கை - அதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அழுத்தமான கோரிக்கையாகும்.

கேள்வி: அரியானா, பஞ்சாப் போன்று தமிழ்நாட்டில் அந்த எழுச்சிவரவில்லையே. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் விவசாயிகளுக்காகப் போராட்டம் நடத்துவீர்களா?

மு.க.ஸ்டாலின்: போராடிக் கொண்டுதானே இருக்கிறார்கள். திருவாரூரில் டிராக்டர் பேரணி நடத்தியவர்களை, ஜாமீனில் வர முடியாத அளவிற்கு வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். ஏற்கெனவே நாங்கள் அனைத்துக் கட்சிக்கூட்டம் நடத்தி, தீர்மானம் போட்டிருக்கிறோம்.

உண்ணாவிரதப் போராட்டத்தினை ஒரு நாள் முழுவதும் நடத்தினோம். தொடர்ந்து போராட்டங்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம். சட்டமன்றத்தைக் கூட்டி, விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சொல்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

Also Read: “அண்ணா, எம்.ஜி.ஆருடன் பழகிய இன்றைய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான்” : ‘இந்தியா டுடே’ புகழாரம்!