Tamilnadu

மதுரை பாஜக ஊடகப்பிரிவு செயலாளர் கைது: பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக 200க்கும் மேற்பட்டோர் புகார்!

மதுரை வீரபாண்டியை சேர்ந்தவர் எம்.மணிகண்டன் (40). இவர் பா.ஜ.கவின் மதுரை புறநகர் மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளராக இருந்து வருகிறார். இவர் அப்பகுதி பொதுமக்கள் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், தர மறுப்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு போடுவேன் என மிரட்டுவதாகவும் அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சில நாட்களுக்கு முன் மதுரை மாவட்ட எஸ்.பி., சுஜித்குமாரிடம் புகார் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யும்படி எஸ்.பி., உத்தரவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், வீரபாண்டி ஊராட்சித் தலைவரின் கணவரை கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி வீரபாண்டி ஊராட்சி மன்ற தலைவர் சுகப்பிரியாவின் கணவர் விஜயகுமார் உளமச்சிகுளம் போலீசில் புகார் அளித்தார்.

அவரது புகாரில் கூறியிருப்பதாவது: எனக்கு எதிராக ஊர் பொதுமக்களை திரட்டி எஸ்.பியிடம் புகார் கொடுக்கிறாயா? உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என மணிகண்டன் மற்றும் அவரது மகன் ஆதித்யா(20) ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த உமச்சிக்குளம் போலீசார் மணிகண்டன் மற்றும் அவரது மகன் ஆதித்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது மகன் ஆதித்யாவை தேடிவருகின்றனர்.

இந்நிலையில் பா.ஜ.கவில் மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளராக பதவி வகித்து வந்த நிலையில் அவர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் கட்சி தலைமைக்கு சென்றதால் அவரை மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் பதவியிலிருந்து நீக்கி உள்ளதாக பா.ஜ.க., புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், ஊடகப்பிரிவு புறநகர் மாவட்ட செயலாளர் தங்கவேல் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Also Read: நாகையில் அதிமுகவினருடன் கூட்டுசேர்ந்து குடைச்சல் கொடுத்த பாஜக பிரமுகர்; ஓட்டல் உரிமையாளர் தற்கொலை முறச்சி