Tamilnadu

“மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்துவிடுவார்கள்” : துரைமுருகன் பேச்சு!

ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கத்தாரி குப்பம், நெல்லிக்குப்பம் ஆகிய பகுதிகளில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மக்கள் கிராம சபை கூட்டம் வாலாஜா ஒன்றிய செயலாளர் சேஷா வெங்கட் தலைமையில் நடைபெற்றது.

நடைபெற்ற இந்த கூட்டத்தில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க பொதுச் செயலாளருமான துரைமுருகன், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

பின்னர் உரையாற்றிய அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், “தமிழகத்தைப் பொறுத்தவரையில் தி.மு.க ஆட்சிக் காலம் தான், பொற்கால ஆட்சியாக இருந்தது. தி.மு.க ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட திட்டங்கள் தான் இன்று வரை நடைமுறையில் உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் எந்த ஒரு திட்டமும் கொண்டு வரப்படவில்லை. மக்களைப் பற்றி சிந்திக்கின்ற மக்களின் நலனுக்காக பணியாற்றுகின்ற ஒரே அரசு எது என்றால் அது திமுக அரசு” என்று உரையாற்றினார்.

இறுதியாக உரையாற்றிய தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், “கடந்த தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை அ.தி.மு.க அரசு வந்தவுடன் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய சட்டமன்றத்தில் விவாதம் நடத்தினர்.

அப்போது தி.மு.க எதிர்த்ததால் தான் விவாதிப்பதை கைவிட்டு இலவச மின்சாரத்தை கொடுத்து வந்தனர். மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டம் ரத்து செய்வதுடன் அனைத்து விவசாய நிலங்களுக்கும் மின் இணைப்புகள் துண்டிக்கப்படும்” என தெரிவித்தார்.

Also Read: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளித்த பஞ்சாபி நடிகருக்கு NIA சம்மன் - பா.ஜ.க அரசின் பழிவாங்கும் நடவடிக்கை!